பெரம்பலூர் அருகே நாட்டார்மங்கலத்தில் தவெக கிளைச் செயலாளருக்கு அரிவாள் வெட்டு: பக்கத்து வீட்டுகாரர் வெறிச்செயல்
பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள ஜே.ஜே. காலனி சேர்ந்தவர் சேகர் மகன் லோகநாதன் (36). நாட்டார்மங்கலம் தவெக கிளைச் செயலாளரான இவர், தனியார் டயர் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகே கோவிந்தராஜ் மகன் பெருமாள் (43) என்பவரும் வசித்து வருகிறார். இவரது மனைவி சூர்யாவுக்கும் லோகநாதனுக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததால் இருவருக்கும் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இது தெரியவந்ததால் பெருமாள் தனது மனைவி மற்றும் லோகநாதனை கண்டித்தார். ஆனால் லோகநாதன் கண்டுகொள்ளாமல் வெவ்வேறு செல்போன் எண்ணை பயன்படுத்தி பெருமாள் மனைவியை தொடர்பு கொண்டு வந்தார்.
இது தெரியவந்ததும், பெருமாள் இன்று மாலை லோகநாதனிடம் தகராறில் ஈடுபட்டார். இந்த தகராறு முற்றியதில், கோபமடைந்த பெருமாள் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து லோகநாதன் மீது சரமாரியாக தாக்கினார். இதில் லோகநாதனின், அவரது தலை மற்றும் கை விரல் பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. கீழே விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தை தொடர்ந்து பெருமாள், பாடாலூர் போலீசில் ஆயுதத்துடன் சரணடைந்தார். அவரை போலீஸார் கைது செய்தனர். இதற்கிடையில் இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் டி.எஸ்.பி. சுரேஷ், பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரகாஷ் ஆகியோருக்கு சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.