மேட்டூர் அணை திறந்து 12 நாளாகியும் கடைமடைக்கு தண்ணீர் வந்து சேரவில்லை: அதிமுக மாஜி அமைச்சர் குற்றச்சாட்டு
மேட்டூர் அணை திறந்து 12 நாளாகியும் கடைமடைக்கு தண்ணீர் வந்து சேரவில்லை: அதிமுக மாஜி அமைச்சர் குற்றச்சாட்டு
வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓஎஸ் மணியன் எம்எல்ஏ நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஜூன் 12ம்தேதி திறக்க வேண்டிய அணை செப்டம்பர் 1ம் தேதி திறக்கப்பட்டுள்ளது. காலத்தில் உரிய நடவடிக்கைகளை தவெக அரசு மேற்கொள்ளாத காரணத்தால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர் இதுவரையில் கடைமடை பகுதிக்கு வந்து சேரவில்லை. தொடக்க நிலையில் 7 ஆயிரம் கனஅடி முதல் தற்போது 12,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இது போதுமான அளவில் இல்லாததால் தற்போது கோரையாறு தலைப்பு வரை மட்டுமே எட்டியுள்ளது.
கடைமடை வரை தண்ணீர் கிடைக்க நாள்தோறும் 20,000 கன அடி திறக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். குறுவை பருவம் நின்று போன நிலையில் கால்நடைகள் தண்ணீர் குடிக்கவும், மக்களின் பயன்பாட்டிற்கும் கடைமடை வரை தண்ணீர் வந்து குளம் குட்டைகளில் தங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேட்டூர் அணை கட்டுவதற்கு நான்கரை கோடி மட்டுமே செலவாகியுள்ளது. ஆனால் தற்போது தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் விஜய் சென்ற செலவு ஆறரை கோடி என கூறுகிறார்கள். இதனை சிந்தித்து பார்க்க வேண்டும். அண்மைக்காலமாக மின்வெட்டு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் பத்து முறை இரவில் மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அதேபோல மின் கட்டண உயர்வால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சரியான கட்டண விகிதத்தை முறைப்படுத்தவும் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.