சென்னையின் 2வது புதிய விமான நிலையத்திற்கு 2 இடங்கள் தேர்வு
சென்னை: சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பதற்காகத் தமிழக அரசு இரண்டு இடங்களைத் தேர்வு செய்துள்ளது; மேலும், இது குறித்து சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ளுமாறு இந்திய விமான நிலைய ஆணையத்திடம் கோரியுள்ளது. கடந்த தி.மு.க., ஆட்சியில், பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை, 2025ல் த.வெ.க., தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதனால் தற்போது விஜய் முதல்வரானதும், பரந்துார் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மாற்று இடங்களைத் தேடப்போவதாக முதல்வர் விஜய் அறிவித்த ஒரு வாரத்திற்குப் பிறகு முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செய்யூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டிக்கு அருகிலுள்ள மனல்லூர் ஆகிய இடங்களை ஆய்வு செய்யுமாறு மாநில அரசு இந்திய விமான நிலைய ஆணையத்திடம் கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்த இரண்டு இடங்களும் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு உள்ள இடங்களாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. தற்போது இந்த இரண்டு இடங்களில் எங்கேயாவது ஒரு இடத்தில் விமான நிலையம் அமைக்கும் பணியை தவெக அரசு கையில் எடுத்துள்ளது. இந்திய விமான நிலைய ஆணையம் தனது சாத்தியக்கூறு ஆய்வறிக்கையில் பரிந்துரைகளை வழங்கிய பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும்.
தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் குழு ஒன்று ஏற்கனவே இந்த இரண்டு இடங்களிலும் முதல் கட்ட ஆய்வுகளை நிறைவு செய்துள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. செய்யூர் இடம் புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவிலும், கல்பாக்கத்திலிருந்து சுமார் 35 கி.மீ தொலைவிலும் உள்ளது. இது மீனம்பாக்கத்தில் உள்ள தற்போதைய விமான நிலையத்திலிருந்து 100 கி.மீ தொலைவில் உள்ளது.
மனல்லூர் இடம் நகரத்திலிருந்து 50 கி.மீ தொலைவிலும், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 35 கி.மீ தொலைவிலும் உள்ளது. இந்திய விமான நிலைய ஆணையம் இந்த இரண்டு இடங்களில் ஒன்றை பரிந்துரைத்தாலும், அந்த இடங்களின் அமைவிடத்தைக் கருத்தில் கொண்டு, பல்வேறு ஒழுங்குமுறை அமைப்புகளிடமிருந்து மீதமுள்ள அனுமதிகளைப் பெறுவதில் சில சிக்கல்கள் இருக்கலாம் என தெரிகிறது.
செய்யூர் பகுதிக்குச் சாத்தியக்கூறுகள் உள்ளன; ஆனால் அப்பகுதியின் வான்வெளி தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதி தேவைப்படும். அதேசமயம் மனல்லூர் இடத்தில் சில சவால்கள் உள்ளன. அடுத்த கட்டமாக, இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் குழு ஒன்று அந்த இரண்டு இடங்களையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யும்; அதன் பிறகு அறிக்கை தயாரிக்கப்படும். இந்த அறிக்கை சில மாதங்களில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.