விதியுடன் மோது, ஐபிஎல் உடன் மோதாதே.. பிஎஸ்எல் தொடரை மே மாதத்திலிருந்து ஜனவரிக்கு மாற்றிய பாகிஸ்தான்
விதியுடன் மோது, ஐபிஎல் உடன் மோதாதே.. பிஎஸ்எல் தொடரை மே மாதத்திலிருந்து ஜனவரிக்கு மாற்றிய பாகிஸ்தான்
லாகூர்: பாகிஸ்தானின் டி20 தொடரான பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் 2027 ஆம் ஆண்டு சீசனை ஜனவரி மாதத்தில் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. இதன்படி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் பிஎஸ்எல் தொடரின் உரிமையாளர்கள், இத்தொடரை மீண்டும் ஜனவரி-பிப்ரவரி மாதங்களுக்கு மாற்றுவது குறித்து அண்மையில் ஆலோசித்துள்ளனர்.
இந்தத் தொடரை முன்னதாகவே நடத்துவதற்கான ஆலோசனையை, பிஎஸ்எல் தொடரின் ஊடக உரிமங்களைப் பெற்றுள்ள 'வாலி டெக்னாலஜிஸ்' நிறுவனம் முன்வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பிஎஸ்எல் தொடரின் முதல் ஒன்பது சீசன்கள் ஜனவரி-பிப்ரவரி மாதங்களிலேயே நடத்தப்பட்டன. எனினும், 2025-ல் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2026-ல் நடைபெறவுள்ள ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை ஆகியவற்றின் காரணமாக, கடந்த இரண்டு சீசன்கள் ஏப்ரல்-மே மாதங்களுக்கு மாற்றப்பட்டன. தற்போது 2027 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வேறு எந்த முக்கிய ஐசிசி தொடர்களும் திட்டமிடப்படாததால், பிசிபி மீண்டும் பிஎஸ்எல் தொடரை அதன் வழக்கமான ஜனவரி-பிப்ரவரி கால அட்டவணைக்கே மாற்ற பரிசீலித்து வருகிறது.
இது தான் காரணம் என்று வெளியே சொல்லப்பட்டாலும், ஐபிஎல் தொடருடன் போட்டு போடவே பிஎஸ்எல் தொடரை பாகிஸ்தான் ஏப்ரல் மே மாதம் மாற்றியது. அது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இருப்பினும், இந்த ஜனவரி பிப்ரவரி கால அட்டவணையானது தென்னாப்பிரிக்காவின் எஸ்ஏ20 மற்றும் ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக் ஆகிய தொடர்களுடன் மோதும் சூழலை உருவாக்கும். இதனால் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் பிஎஸ்எல் தொடரில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நிலவும் வானிலை காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சில சவால்களை சந்திக்க நேரிடலாம். இந்த மாதங்களில் பஞ்சாப் மாகாணத்தில் வெப்பநிலை ஒற்றை இலக்கம் வரை குறையக்கூடும். லாகூர், ராவல்பிண்டி மற்றும் முல்தான் ஆகிய பிஎஸ்எல் தொடரின் முக்கிய மைதானங்கள் இந்த பகுதியிலே அமைந்துள்ளன.
இதற்கு தீர்வாக, குளிர்கால தாக்கம் குறைவாக இருக்கும் கராச்சி நகரில் போட்டிகளைத் தொடங்கி, பின்னர் வானிலை சீரடையும் போது பஞ்சாப் பகுதிக்கு போட்டிகளை மாற்றலாம் என்ற ஆலோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.