ஊழல் செய்த யாரும் தப்பிக்க முடியாது; அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
மதுரை: ஊழல் செய்த யாரும் தப்பிக்க முடியாது; யார் மீதும் பொய் வழக்கு போட வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
அவரது பேட்டி: யார் மீதும் எந்த பழிவாங்கல் நடவடிக்கையும் எடுக்க முடியாது. சும்மா பொய்யான வழக்கு எல்லாம் போட முடியாது. ஆதாரங்கள் இருந்தால் வழக்கு போடுவார்கள். போன முறை முன்னாள் அமைச்சர் நேருவுக்கு பணம் வாங்கி அரசு பணிக்கு ஆள் சேர்ந்ததாக கூறி அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. ஆதாரங்களுடன் அனுப்பி இருந்தார்கள்.
நிறைய ஊழல்கள், முறைகேடுகள் எல்லாமே கூட்டு சதி என இரண்டு முறை கோர்ட்டில் அமலாக்கத்துறை ஆதாரங்களை சமர்பித்து இருக்கிறது. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அந்த வழக்கை பதிவு செய்து இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
ஏது சம்பந்தமாக என்று தெரியவில்லை. இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தான் விளக்கம் அளிக்க வேண்டும். சம்மன் எல்லாம் அனுப்பி விசாரணை நடத்துவார்கள். ஊழல் செய்தால், தவறு செய்தால் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது.
ஆதாரங்கள் இருக்கும் போது எப்படி தப்பிக்க முடியும். அதனால் யார் மீதும் பொய் வழக்கு போட வேண்டிய அவசியம் இல்லை. ஏது எல்லாம் ஆதாரம் இருக்கிறதோ சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும். மின்வாரியத்தில் 45 டெண்டர்களில் முறைகேடுகள் இருக்கிறது.
அது எல்லாம் எந்த கால கட்டத்தில் நடந்துள்ளது என்பதை சொல்ல வேண்டும், அது இல்லாமல் கோர்ட்டில் நிரூபிக்க முடியுமா? சரியான முறைகேடுகள் மக்களின் பணம் தவறாக பயன்படுத்தும் பட்சத்தில் வழக்குகள் பதிவு செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.