கம்யூ., தனித்து போட்டியிடுவது அவர்களின் முடிவு: சபாநாயகர் பிரபாகர் கருத்து
திருப்பத்துார்: ''கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியிடுவதும், இடம் மாறுவதும், ஆதரவு அளிப்பதும் அந்தந்த கட்சிகள் எடுக்கும் முடிவு,'' என, தமிழக சட்டசபை சபாநாயகர் பிரபாகர் கூறினார்.
திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடியில் அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் நடக்க உள்ள இடைத்தேர்தலில், த.வெ.க., அரசுக்கு ஆதரவாக உள்ள, கம்யூனிஸ்ட கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றனர். கட்சிகள் இடம் மாறுவதும், ஆதரவு அளிப்பதும் அந்தந்த கட்சிகள் எடுக்கும் முடிவு. சபாநாயகராக இருக்கும் நான், இவற்றை எல்லாம் கவனமாக பார்த்து கொண்டிருக்கிறேன்.
முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தினர். எந்த அரசாக இருந்தாலும் அடிப்படை முகாந்திரம் இல்லாமல் நடவடிக்கை எடுப்பதாக, என் 50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் எனக்கு தெரியவில்லை.
சட்டசபை வரலாற்றில், தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சியினருக்கும், அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் அதிக நேரம் ஒதுக்கி தந்துள்ளேன்; அதற்கான ஆதாரமும் உள்ளது. யாருடைய குரல்வளையையும் நெரிப்பது என் நோக்கமல்ல. உரிய நேரத்தில், அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.