சிங்டெல் சலுகை விலைப் பங்குகள்: கால்வாசிப் பங்குதாரர்கள் விற்றனர்
சிங்டெல் நிறுவனத்தின் சலுகை விலை பங்குகளின் உரிமையாளர்களில் 27 விழுக்காட்டினர், அதாவது ஏறத்தாழ 1,63,000 பேர், ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி தங்களது பங்குகளை விற்பனை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி நிலவரப்படி 83,000 பங்குதாரர்கள் (13 விழுக்காடு) மட்டுமே தங்களது பங்குகளை விற்றிருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
மொத்தமுள்ள தள்ளுபடி பங்குகளில் 25 விழுக்காடு, அதாவது கிட்டத்தட்ட 180 மில்லியன் பங்குகள் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சிங்டெல் நிறுவனம் புதன்கிழமையன்று (செப்டம்பர் 17) வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
பங்குகளை விற்றவர்களில் 60 விழுக்காட்டுக்கும் அதிகமானோருக்குத் தனிநபர் மத்திய வைப்பகக் கணக்குகள் (சிடிபி) இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய சேமநிதிக் கழகத்தின் வசமிருக்கும் எஞ்சிய சலுகை விலை பங்குகள், எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் தேதியன்று உரிமையாளர்களின் ‘சிடிபி’ கணக்குகளுக்கு மாற்றப்படவுள்ளன.
இதனையடுத்தே பங்குகளின் விற்பனை அதிகரித்துள்ளது. ‘சிடிபி’ கணக்கு வைத்திருப்பவர்களுக்குப் பங்குகள் நேரடியாக மாற்றப்படும் என்றும், கணக்கு இல்லாதவர்களுக்குச் சிறப்பு ‘சிடிபி’ கணக்குகள் உருவாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.