ஆசிய கோப்பையை மோஷின் நக்வியிடம் வாங்க மாட்டோம்..ஏற்கனவே சொல்லியும் சிக்கலை ஏற்படுத்த முயற்சி
ஆசிய கோப்பையை மோஷின் நக்வியிடம் வாங்க மாட்டோம்..ஏற்கனவே சொல்லியும் சிக்கலை ஏற்படுத்த முயற்சி-பிசிசிஐ
துபாய்: மகளிர் ஆசியக் கோப்பை தொடரை இந்திய அணி வெல்லும்பட்சத்தில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை இந்திய வீராங்கனைகள் பெற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை பிசிசிஐ ஏற்கனவே ACCயிடம் முன்கூட்டியே தெரிவித்திருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் இருக்கும் மொஹ்சின் நக்வி வேண்டும் என்றே அங்கு வந்திருப்பது உறுதியாகி உள்ளது.
இலங்கை அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, எட்டாவது முறையாக ஆசியக் கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்த பிறகு, இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் சக வீராங்கனைகள் பரிசளிப்பு விழாவின் போது நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற மறுத்தனர்.
இலங்கை அணியின் கடைசி விக்கெட் வீழ்ந்ததற்கும் பரிசளிப்பு விழா தொடங்குவதற்கும் இடையே சுமார் 40 நிமிடங்கள் வரை நீண்ட தாமதம் ஏற்பட்டது. அப்போது மொஹ்சின் நக்வி மேடையில் கோப்பையை வழங்க நின்று கொண்டிருந்தார். ஸ்மிருதி மந்தனா அங்கு வந்தபோது அவர் மேடையில் இருப்பதைப் பார்த்து மீண்டும் டிரெஸ்ஸிங் ரூமிற்கே திரும்பிச் சென்றார்.
முதலில் நடுவர்கள் மற்றும் போட்டி அதிகாரிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, இலங்கை அணியின் கேப்டன் சாமரி அட்டபட்டு மற்றும் அவரது அணி வீராங்கனைகள் ரன்னர்-அப் பதக்கங்களைப் பெற்றுக்கொண்டனர். அதன் பிறகு, ஏசிசி தலைவர் என்ற முறையில் அங்கு நின்றிருந்த நக்வியிடம் இருந்து சாமரி அட்டபட்டு ரன்னர்-அப் காசோலையைப் பெற்றுக்கொண்டு செய்தியாளர்களிடம் பேசினார்.
அட்டபட்டுவின் நேர்காணல் முடிந்தவுடன், இந்திய வீராங்கனைகள் தங்களது வெற்றியாளர் பதக்கங்களையோ அல்லது ஆசியக் கோப்பையையோ பெறுவதைக் காட்டாமலேயே நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.
"இந்த விவகாரத்தில் பிசிசிஐ ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது, அதற்கு நாங்கள் கட்டுப்படுகிறோம். எங்களைப் பொறுத்தவரை இந்தத் தொடர் முடிந்துவிட்டது. நாங்கள்தான் சாம்பியன்கள், அதுவே எங்களுக்குப் போதுமானது. ஆசியக் கோப்பை 2026-ன் சாம்பியன் இந்தியா என்பது பெரிய திரையிலும் காட்டப்பட்டுள்ளது" என்று இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் அமோல் முஜும்தார் போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்தியா எப்போது கோப்பையைப் பெறும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, இதுவரை அதுகுறித்த எந்த தகவலும் இல்லை என்று அவர் பதிலளித்தார். இந்தச் சம்பவம் கடந்த கால நிகழ்வுகளை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது. இதற்கு முன்னர் 2025 செப்டம்பரில் நடைபெற்ற ஆடவர் ஆசியக் கோப்பை தொடரின் போதும், பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையைப் பெற இந்திய அணி மறுத்திருந்தது.
மேலும் அந்த தொடர் முழுவதும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிகளின் போது கைகுலுக்குவதையும் இந்திய வீரர்கள் தவிர்த்திருந்தனர். அதன் தொடர்ச்சியாகவே தற்போதைய மகளிர் அணியின் முடிவும் பிசிசிஐ-யின் கொள்கை முடிவைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.