"இந்திய கிரிக்கெட்டுக்கே பெருமையான தருணம்".. ஆசிய கோப்பை வென்ற மகளிர் அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு
"இந்திய கிரிக்கெட்டுக்கே பெருமையான தருணம்".. ஆசிய கோப்பை வென்ற மகளிர் அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு
துபாய்: 2026 மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் 8-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாறு படைத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்த வரலாற்று வெற்றி நாட்டின் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்க மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கும் என்று அவர் பாராட்டியுள்ளார்.
துபாயில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது. இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, "இந்திய கிரிக்கெட்டிற்கு இது மிகவும் பெருமையான தருணம். ஆசிய கோப்பையை வென்ற மகளிர் அணிக்கு எனது வாழ்த்துகள். தொடர் முழுவதும் அவர்களது தன்னம்பிக்கை, நிலைத்தன்மை மற்றும் வியக்கத்தக்க விளையாட்டு உணர்வு முழுமையாக வெளிப்பட்டது. இந்த வெற்றி நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்கள் விளையாட்டில் சாதிக்க ஊக்கமளிக்கட்டும்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்க வீராங்கனைகள் அதிரடி துவக்கம் அளித்தனர். ஷபாலி வர்மா 39 பந்துகளில் 68 ரன்களும், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா 39 பந்துகளில் 59 ரன்களும் விளாசினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு வெறும் 12.5 ஓவர்களில் 129 ரன்கள் குவித்து பலமான அடித்தளம் அமைத்தது.
இறுதிக்கட்டத்தில் இளம் வீராங்கனை குணாளன் கமலினி 5 பந்துகளில் 15 ரன்கள் சேர்க்க, இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது. மகளிர் சர்வதேச டி20 இறுதிப்போட்டி வரலாற்றில் இது 2-வது அதிகபட்ச ஸ்கோராகும்.
தொடர்ந்து 184 ரன்கள் இலக்குடன் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஸ்ரீ சரணி வெறும் 20 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தொடர் முழுவதும் தோல்வியே சந்திக்காமல் ஆதிக்கம் செலுத்திய இந்திய மகளிர் அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்த வெற்றியின் முடிவில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோசின் நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்க இந்திய வீராங்கனைகள் மறுத்து விட்டனர். அதனால் கோப்பை திரும்ப எடுத்துச் செல்லப்பட்டது.