நாட்டின் எதிரியிடம் இருந்து கோப்பை வாங்க முடியாது.. தேசபக்தி முடிவு.. பிசிசிஐ நெத்தியடி விளக்கம்
நாட்டின் எதிரியிடம் இருந்து கோப்பை வாங்க முடியாது.. தேசபக்தி முடிவு.. பிசிசிஐ நெத்தியடி விளக்கம்
துபாய்: துபாயில் நடைபெற்ற 2026 மகளிர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணி, பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோசின் நக்வியிடம் கோப்பையைப் பெற மறுத்ததற்கான பின்னணி குறித்து பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா விரிவான விளக்கம் அளித்துள்ளார். இந்திய ஆண்கள் அணியின் முந்தைய நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே மகளிர் அணியும் இந்த உறுதியான முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 8-வது முறையாக ஆசிய கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்தது. ஆனால் ஆட்டம் முடிந்த பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மோசின் நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்க மறுத்து இந்திய வீராங்கனைகள் மேடைக்கு வரவில்லை. இதனால் இலங்கை அணிக்கு 2-வது இடத்திற்கான காசோலையை மட்டும் வழங்கிவிட்டு நக்வி மைதானத்தை விட்டு அவசரமாக வெளியேறினார்.
இது குறித்துப் பேசிய பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, "கடந்த 2025 ஏப்ரல் மாதம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு நமது நாட்டின் ஒட்டுமொத்த சூழலும் முற்றிலும் மாறியது. அண்டை நாட்டுடன் (பாகிஸ்தானுடன்) எந்தவித உறவோ அல்லது கிரிக்கெட் தொடர்போ வைத்திருக்கக் கூடாது என இந்திய மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பும் அழுத்தமும் ஏற்பட்டது. ஆனால் பல நாடுகள் பங்கேற்கும் தொடர்களில் அனைத்து நாடுகளுடனும் விளையாட வேண்டும் என்பது நமது இந்திய அரசின் கொள்கையாக உள்ளது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "அரசு விளையாட அனுமதித்தாலும், அவர்கள் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் நாம் ஏற்க வேண்டும் என்ற அவசியமில்லை. நமது நாட்டின் எல்லைகளில் ராணுவ மோதல்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படிப்பட்ட சூழலில், நமது நாட்டின் நலன்களுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்படும் ஒரு முக்கிய தலைவரிடம் இருந்து நமது வீராங்கனைகளால் எப்படி சாம்பியன் கோப்பையைப் பெற முடியும்? கடந்த ஆண்டு ஆண்கள் அணி எடுத்த அதே தேசபக்தி முடிவிற்கு நமது மகளிர் அணியும் தங்களது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது" என்று ஆவேசமாகக் கூறினார்.
மேலும், "கோப்பையை வாங்காததால் நமது வீராங்கனைகளின் அசாத்திய திறமையோ உழைப்போ குறைந்துவிடாது. இந்த தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் இந்திய அணி எதிரணிகளைப் பந்தாடி ஒருதலைப்பட்சமாக வென்றுள்ளது. இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் அசுர வளர்ச்சி அடைந்து வருவதற்கு இதுவே மிகப்பெரிய சான்றாகும். எங்களது அடுத்த முழு கவனமும் 2026 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையை நோக்கியே உள்ளது" என்றும் சைகியா குறிப்பிட்டார்.
இந்தப் போட்டியின் போது துபாய் மைதானத்தின் ராயல் பாக்ஸில் மோசின் நக்வியுடன் அமர்ந்து பேசியது குறித்து எழுந்த சர்ச்சைக்குப் பதிலளித்த சைகியா, "டாஸ் போடப்பட்டது முதல் ஆட்டம் முடியும் வரை நான் ராயல் பாக்ஸில் தான் அமர்ந்திருந்தேன். துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா மற்றும் அமீரக துணைத் தலைவர் காலித் ஆகியோருடன் நக்வியும் வந்து அமர்ந்தார். மைதானத்தில் இருக்கும் போது ஒருவரை சந்தித்து பேசுவது இயல்பான மரபு மட்டுமே. நேற்றைய விவகாரத்தில் வேறு அதிகாரியைக் கொண்டு பரிசளிக்க நாங்களும் முயற்சித்தோம்; ஆனால் அது பலனளிக்கவில்லை. இதில் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. யார் கையில் கோப்பையைத் தருகிறார்கள் என்பது எங்கள் நோக்கமல்ல, இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதே முக்கியம். அதை நாங்கள் சாதித்துவிட்டோம்" என்று விளக்கமளித்தார்.
மைதான மேடைக்குச் செல்லாமல் இந்திய அணியின் ஓய்வறையிலேயே வீராங்கனை நந்தினி சர்மாவுக்கு சிறந்த பீல்டருக்கான பதக்கத்தை வழங்கியதாகக் குறிப்பிட்ட அவர், அந்த நேரத்தில் அடுத்ததாக வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் குறித்து மட்டுமே வீராங்கனைகளுடன் ஆலோசிக்கப்பட்டதாகவும், கோப்பை சர்ச்சை குறித்து எவ்வித விவாதமும் நடைபெறவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.