உத்திரமேரூர் அருகே மழையில் நனைந்த நெற்பயிர்கள் கவலையில் விவசாயிகள்
உத்திரமேரூர் அருகே மழையில் நனைந்த நெற்பயிர்கள் கவலையில் விவசாயிகள்
உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கம், எஸ்.மாம்பாக்கம், அருங்குலியூர், கரும்பாக்கம் ஆகிய கிராமங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்த கிராமங்களை சுற்றியுள்ள விவசாயிகள் ஒவ்வொரு பருவ அறுவடையின் போதும், தங்களது நெல் பயிர்களை ஆங்காங்கே அமைக்கப்படும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வழங்கி பயனடைந்து வந்தனர். அந்த வகையில், நடப்பாண்டு சொரணவாரி பருவத்தில் நெல் அறுவடை செய்த விவசாயிகள் கடந்த ஒரு மாதமாக இந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நடந்த இடங்களில் தங்களது நெற்பயிர்களை எடுத்து வந்து குவியல் குவியலாக கொட்டி தர்பாய் போட்டு மூடி பாதுகாத்து வருகின்றனர். எனினும் அந்தந்த கிராமங்களில் அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்காமல் இருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது இந்த மழையில் ஆங்காங்கே கொட்டப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழையில் நனைந்து வீணானது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். எனவே, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சாலவாக்கம். எஸ்.மாம்பாக்கம், அரும்புலியூர் கரும்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் போர்க்கால அடிப்படையில் திறக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும், அரசுக்கும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மழையில் நனைந்த நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.