📅 Sunday, 20 September 2026 IST | புரட்டாசி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 20, 2026 07:03 PM

தஞ்சை உள்பட 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தஞ்சை உள்பட 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: அந்தமான் அருகே புதிய காற்றழத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், தஞ்சாவூர் உள்பட 21 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது.

இது வடமேற்கு திசையில் கிழக்கு-மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை கிழக்கு-மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், செப்.22-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் படிப்படியாக வலுவடையக்கூடும்.

தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்கு-மத்திய வங்கக் கடல் பகுதிகளில் சுமார் 0.9 கிமீ உயரத்தில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (செப்.21) நீலகிரி, கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை, கடலூர், திருப்பத்தூர்,வேலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செப்டம்பர் 22-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 23, 24 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும்,

திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் பெட்டமுகிலாளத்தில் 15 செமீ, புதுச்சேரி திருக்கனூர், தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியில் தலா 12 செமீ,

மதுரை மாவட்டம் புலிப்பட்டியில் 10 செமீ, புதுச்சேரியில் 9 செமீ, திருப்பத்தூர், கோவை மாவட்டம் வால்பாறை, சிவகங்கை மாவட்டம் உபாசியில் தலா 8 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.