மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை: இடைத்தேர்தல் நடக்கும் மதுராந்தகம், தாரா புரம் தொகுதிகளில், த. வெ.க., - தி.மு.க., - அ.தி. மு.க., மற்றும் நா.த.க., ஆகிய கட்சிகள், தங்கள் வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்து விட்டன.
த.வெ.க., அரசை வெளியில் இருந்து ஆதரிக்கும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தன.
இந்நிலையில், வேட்பாளர்கள் தேர்வு குறித்த ஆலோசனை, சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூ., அலுவலகத்தில் நேற்று நடந்தது.
பின், மார்க்சிஸ்ட் தமிழக செயலர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் தமிழக செயலர் வீரபாண்டியன் ஆகியோர் அளித்த பேட்டி:
மதுராந்தகம் தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் தீண்டாமை ஒழிப்பு இயக்க பொதுச்செயலர் சுகந்தி போட்டியிடுகிறார்.
தாராபுரம் தொகுதியில், இந்திய கம்யூ., தாராபுரம் தாலுகா செயலர் லட்சுமணன் போட்டியிடுகிறார்.
த.வெ.க., அரசுக்கு எங்கள் ஆதரவு தொடர்கிறது. அதற்காக, அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆதரிப்பதாக அர்த்தம் இல்லை; ஆதரிக்க வேண்டியதை ஆதரிப்போம்; எதிர்க்க வேண்டியதை எதிர்ப்போம்.
மின் வெட்டு பிரச்னை, மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.