சட்டப்பேரவையில் திமுகவை மிஸ் செய்கிறோம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
சட்டப்பேரவையில் திமுகவை மிஸ் செய்கிறோம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
"திமுக Miss You, மீண்டும் சட்டப்பேரவைக்கு வாருங்கள், மக்களுக்காக சண்டை போடலாம்" என ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்
Published : September 8, 2026 at 10:54 PM IST
சென்னை: திமுக உறுப்பினர்களை சட்டப்பேரவையில் மிஸ் செய்வதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் நிறைவு நாளில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சபாநாயகருக்கு நன்றி தெரிவித்து பேசினார். அப்போது பேசிய அவர், "இன்று பேரவைத் தலைவருக்கு நன்றி சொல்லும் நாள். கல்லூரியில் நடைபெறும் Farewell Day போன்று, உங்களை விட்டு செல்வதற்கு இன்று வருத்தமாக இருக்கிறது" என்றார்
அப்போது குறிக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், "நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது சட்டப்பேரவை நிகழ்வுகளைப் பார்ப்பதற்காக வந்தேன். அப்போது என்னை அவைக்குள் அனுமதிக்கவில்லை. ஒருநாள் இந்த அவையில் நான் அமர்வேன் என்று கூறிச் சென்றேன்" என்றார்
தொடர்ந்து பேசிய ஆதவ் அர்ஜூனா, "2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை கலைஞர் ஆட்சிக் காலத்தில் ஒரு மாணவனாக சட்டப்பேரவை நிகழ்வுகளைப் பார்த்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது இந்த அவைக்குள் நுழைய முடியுமா? என்று நினைத்தேன். அதை இன்று முதல்வரின் பிரச்சாரத்தின் மூலம் நிரூபித்திருக்கிறேன். இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தொலைக்காட்சிகளில் சட்டப்பேரவை விவாதங்கள் நடைபெறும்போது சண்டைக் காட்சி போல் இருப்பதாக சிலர் கூறுகின்றனர். நாங்கள் சட்டப்பேரவை நிகழ்வுகளைத் தொடர்ந்து நேரலையில் ஒளிபரப்பி வருகிறோம். இதுதான் ஜனநாயகம்.
தமிழக முதல்வருக்கும், அனைத்து கட்சிகளுக்கும் நன்றி. கடந்த இரண்டு நாட்களாக திமுக உறுப்பினர்கள் அவைக்கு வரவில்லை. அவர்களை நாங்கள் மிஸ் செய்கிறோம்.
மக்களுக்கு கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. கடந்த காலத்தில் நடைபெற்ற குறைகளையும், தவறுகளையும் நாம் மீண்டும் செய்யக் கூடாது. சட்டமன்றத்தில் வெளிப்படைத்தன்மை கொண்டு வரப்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மை வந்தால்தான் ஊழலை ஒழிக்க முடியும். பழைய கட்டமைப்பை உடைத்து, புதிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும். மீண்டும் விரைவில் சட்டப்பேரவையைக் கூட்டுங்கள். மக்களுக்காக ஜனநாயக முறையில் சண்டை போடுவோம்.
முதல்வர் அனைவருக்கும் மரியாதை அளிப்பவர். அவரது உடல்மொழியைக் கூட தவறாகக் காட்டவில்லை. வரும் பிப்ரவரி மாதம் அமைச்சர்கள், நீதிபதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது. திமுக Miss You. மீண்டும் சட்டப்பேரவைக்கு வாருங்கள், மக்களுக்காக சண்டை போடலாம்" என ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.