சதுர்த்திக்கு தயாராகும் 'சிக்ஸ் பேக்' விநாயகர்
எண்ணுார்:விநாயகர் சதுர்த்திக்கு புதுவரவாக, காளை மீது அமர்ந்திருக்கும், 'சிக்ஸ் பேக்' விநாயகர் சிலைகள், வடிவமைக்கப்பட்டுள்ளன.
நாடு முழுதும், செப்., 14ல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. அதன்படி, ஹிந்து முன்னனி சார்பில், சென்னை முழுவதும், 5,501 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.
அதன் ஒரு பகுதியாக, எர்ணாவூரில், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத சிலைகள் செய்யும் பணி நடந்து வருகிறது.
அதன்படி, கிழங்கு மாவு, பேப்பர் கூழ் மற்றும் ரசாயனம் கலக்காத வர்ணம் பூசப்பட்டு, 3 - 10 அடி உயரம் கொண்ட பிரமாண்ட விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வருகின்றன.
பண்ருட்டியில் இருந்து, பிரத்யேக சிலை வடிவமைப்பாளர்கள் வரவழைக்கப்பட்டு, ஆகம விதிகளை பின்பற்றி, வழக்கமாக செய்யப்படும் கமலம், சிம்மம், காளை, மயில், மான், நாகம் மீது அமர்ந்திருக்கும் விநாயகர் உட்பட, 30 க்கும் மேற்பட்ட வகையான விநாயகர் சிலைகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தாண்டு புதுவரவாக, காளை மீது அமர்ந்திருக்கும், தொந்தி இல்லாத 'சிக்ஸ் பேக்' விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இந்த சிலைகள், சென்னையின் முக்கிய நகர்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஒரு வாரம் வழிபாட்டிற்கு பின், ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்கப்படும்.