2 நாட்களில் 230 ஓவர்கள் பேட்டிங் செய்தார்.. 25 வயதான வீரர் அனைத்து போட்டியிலும் இருக்கனும்
2 நாட்களில் 230 ஓவர்கள் பேட்டிங் செய்தார்.. 25 வயதான வீரர் அனைத்து போட்டியிலும் இருக்கனும்- ஆகாஷ்
மும்பை: இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் துருவ் ஜூரெல், வரும் ஆண்டுகளில் மூன்று விதமான கிரிக்கெட்டிலும் இந்திய அணியின் முக்கிய வீரராக உருவெடுப்பார் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா வலுவாக ஆதரவு தெரிவித்துள்ளார். அண்மையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில், ரிஷப் பண்டை முந்திக்கொண்டு துருவ் ஜூரெல் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு பேட்டராகவே விளையாடும் அளவிற்கு ஜூரெல் தனது திறமையை நிரூபித்துள்ளார். இருப்பினும், அவரது வெள்ளை-பந்து சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை இன்னும் முழுமையாகத் தொடங்கவில்லை. 2024 ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக டி20 அணியிலும், 2025 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு முன்பு ஒருநாள் அணியிலும் அவர் முதல்முறையாக தேர்வு செய்யப்பட்டார்.
இதுவரை அவர் 4 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார், ஒருநாள் போட்டிகளில் இன்னும் அறிமுகமாகவில்லை. இது குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, "அவரால் மூன்று விதமான போட்டிகளிலும் விளையாடும் வீரராக மாற முடியும், ஏனென்றால் அவரிடம் அதற்கான தைரியம் உள்ளது. அவரது ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் அவரை அந்த உயரத்திற்கு கொண்டு செல்லும். துருவ் ஜூரெலைப் பார்க்கும்போது, அவர் மிகவும் தெளிவான மனநிலையைக் கொண்டவர் என்பது புரியும்."
"தான் ஒரு இயந்திரம் போல மாறும் வரை கடினமாக உழைப்பதாக அவரே கூறுகிறார். அழுத்தங்களைப் பற்றியோ அல்லது எதிர்பார்ப்புகளைப் பற்றியோ தனக்கு கவலையில்லை என்றும், அதுகுறித்து சிந்திப்பதற்கு தனது மூளைக்கு அவர் இடம் கொடுப்பதில்லை என்றும் கூறுகிறார்" என்று ஆகாஷ் சோப்ரா குறிப்பிட்டுள்ளார்.
"2024 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது, விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு ஒரு வார இடைவெளி இருந்தது. அந்தப் பிரேக்கின் போது கிட்டத்தட்ட அனைத்து வீரர்களும் தங்கள் வீடுகளுக்குச் சென்றனர். ஆனால் ஜூரெல் தான் பயிற்சி பெறும் இடத்திற்குச் சென்று, பயிற்சியாளர் ஜுபின் பருச்சாவுடன் இணைந்து இரண்டு நாட்களில் 230 ஓவர்கள் பேட்டிங் பயிற்சி செய்தார். எனவே, அவரால் மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாட முடியும் என்று நான் நினைக்கிறேன்."
"அதற்கு வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமே முக்கியம். அவர் எதையும் மாற்றத் தேவையில்லை, அவரது கிரிக்கெட் வாழ்க்கை மேல்நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது" என்று சோப்ரா கூறினார்.இந்திய அணிக்காகத் தனது இரண்டாவது போட்டியில் விளையாடிய ஜூரெல், 2024 ராஞ்சி டெஸ்டின் கடினமான பிட்ச்சில் முறையே 90 மற்றும் 39 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். அத்துடன் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.