விதிமுறைகளைப் பூர்த்திசெய்யாத 46 தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் பறிமுதல்
கடந்த ஆகஸ்ட் மாதம் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளில் விதிமுறைகளைப் பூர்த்திசெய்யாத 46 தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (எல்டிஏ) வியாழக்கிழமை (செப்டம்பர் 10) தெரிவித்தது.
அந்நடவடிக்கைகளின்போது அதிகாரிகள் கிட்டத்தட்ட 231 குற்றங்களைக் கண்டுபிடித்ததாக ஆணையம் ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டது.
“பொதுமக்களுக்கான நடமாட்டப் பாதைகளை அனைவருக்கும் பாதுகாப்பாக வைத்திருக்க தொடர்புகொள்ளும் நடவடிக்கைகளை எடுத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வதுடன் தனிநபர் நடமாட்டச் சாதனப் பயன்பாடு தொடர்பில் தவறு இழைப்போர்மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுப்போம்,” என்று நிலப் போக்குவரத்து ஆணையம் எடுத்துரைத்தது.
மாற்றியமைக்கப்பட்டதுபோல் தெரியும் மின்சைக்கிள் உட்பட பல்வேறு தனிநபர் நடமாட்டச் சாதனங்கள், ஆணையம் பகிர்ந்துகொண்ட படங்களில் காணப்பட்டன. பல சைக்கிளோட்டிகளும் ஒரு படத்தில் காணப்பட்டனர்.
ஆகஸ்ட் 14ஆம் தேதி அதிகாலை வெஸ்ட் கோஸ்ட் அவென்யூவில் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகளால் துரத்தப்பட்ட சிலரும் அவர்களில் அடங்குவர். அச்சம்பவம் காணொளியில் பதிவாகியிருந்தது.
இதற்கிடையே, நிலப் போக்குவரத்து மற்றும் அது தொடர்பான விவகாரங்கள் மசோதாவுக்குக்கீழ் (Land Transport and Related Matters Bill) தீ மூளும் அபாயத்தைக் குறைக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த எண்ணம் கொண்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் அந்த ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.
அந்த மசோதா, செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.