தெம்பனிஸ் பேருந்து கார் விபத்து: சிறுமி மருத்துவமனையில்
தெம்பனிஸ் சென்ட்ரல் 1, தெம்பனிஸ் சென்ட்ரல் 3 சாலை சந்திப்பில் பேருந்தும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் ஆறு வயது சிறுமி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இந்த விபத்து சம்பவம் புதன்கிழமை (செப்டம்பர் 16) மாலை நிகழ்ந்தது.
விபத்து குறித்து தங்களுக்கு மாலை 4.25 மணியளவில் தகவல் கிடைத்தது அதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்தோம் என்று காவல்துறையினரும், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
பேருந்தில் பயணம் செய்த அந்த ஆறு வயது சிறுமி, சுயநினைவுடன் கே.கே. மகளிர், சிறார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
“சேவை எண் 8 பேருந்து, தெம்பனிஸ் சென்ட்ரல் 3 மற்றும் தெம்பனிஸ் சென்ட்ரல் 1 சந்திப்பில் சென்று கொண்டிருந்தது. அப்போது தெம்பனிஸ் சென்ட்ரல் 1 வழியே வந்த வாகனம், சிவப்பு விளக்கு எரியும்போது நிற்காமல் வந்ததால் இந்த மோதல் ஏற்பட்டது,” என்று எஸ்.பி.எஸ் டிரான்சிட் நிறுவனத்தின் பேச்சாளர் விளக்கம் அளித்தார்.
“ நிறுவனம் சிறுமியின் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளது. அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருகிறோம்,” என்று பேச்சாளர் சொன்னார்.
விபத்து தொடர்பில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.