📅 Sunday, 06 September 2026 IST | ஆவணி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 06, 2026 05:03 PM

பாகிஸ்தான் கிரிக்கெட் சரிவின் ஆரம்பமே இந்தியாவை வீழ்த்திய பிறகு தான்.. முகமது யூசூப் சாடல்

பாகிஸ்தான் கிரிக்கெட் சரிவின் ஆரம்பமே இந்தியாவை வீழ்த்திய பிறகு தான்.. முகமது யூசூப் சாடல்

பாகிஸ்தான் கிரிக்கெட் சரிவின் ஆரம்பமே இந்தியாவை வீழ்த்திய பிறகு தான்.. முகமது யூசூப் சாடல்

மும்பை: 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக பெற்ற 10 விக்கெட் வித்தியாசத்திலான வரலாற்று வெற்றிக்குப் பிறகுதான், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீழ்ச்சி தொடங்கியது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது யூசுப் தெரிவித்துள்ளார். இந்த வெற்றிக்குப் பிறகு வீரர்களின் ஈகோ அதிகரித்ததே அவர்களின் தற்போதைய பின்னடைவுக்குக் காரணம் என்று அவர் சாடியுள்ளார்.

உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் பெற்ற முதல் மற்றும் மிகப்பெரிய வெற்றி அதுவாகும். இதன் மூலம் உலகக் கோப்பை தொடர்களில் பல ஆண்டுகளாக இந்தியாவிடம் தொடர்ந்து தோற்று வந்த வரலாற்றுக்கு பாகிஸ்தான் முற்றுப்புள்ளி வைத்தது. ஆனால், அதற்குப் பிறகு விளையாடிய 221 சர்வதேச போட்டிகளில் பாகிஸ்தான் 115 வெற்றிகளையும், 97 தோல்விகளையும் மட்டுமே பதிவு செய்துள்ளது.

அதே நேரத்தில், இந்திய அணி 272 போட்டிகளில் விளையாடி 181 வெற்றிகள் மற்றும் 72 தோல்விகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. இது குறித்து பேசிய முகமது யூசூப், "2021-ல் இந்தியாவுக்கு எதிராக நாம் பெற்ற அந்த வெற்றி, நமக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. அந்த வெற்றிக்குப் பிறகு, தாங்கள் ஏதோ மிகப்பெரிய சாதனையைப் படைத்துவிட்டதாக வீரர்கள் நினைக்கத் தொடங்கினர்."

"அதற்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. சிறப்பாகச் செயல்படும் போது எப்போதும் அடக்கமாக இருக்க வேண்டும். காலரைத் தூக்கிக் கொண்டு, மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்காமல் கர்வத்துடன் நடந்துகொண்டால் பிரச்சனைகள் வரத்தான் செய்யும். அதுதான் இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நடந்துள்ளது" என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

"அணியில் இருந்த ஒவ்வொருவரும் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக மாறவே முயற்சி செய்தனர். இதன் விளைவுகளை பாகிஸ்தான் கிரிக்கெட் இன்னும் அனுபவித்து வருகிறது. கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளில் பாகிஸ்தான் விளையாடிய ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, ஆசியக் கோப்பை என அனைத்துப் போட்டிகளிலும் மிக மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளனர்."

"இவ்வளவு காலமும் பிசிபி வீரர்களுக்கு முழு ஆதரவை வழங்கி வந்துள்ளது. பல பயிற்சியாளர்கள் வந்து சென்றுவிட்டனர், அணிக்கு உதவ பல மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆனால், எந்த ஒரு வீரரும் பொறுப்பேற்று விளையாடவில்லை. இறுதியாக, பிசிபி இந்த கடுமையான முடிவை எடுக்க வேண்டியிருந்தது. பிசிபியின் இந்த நடவடிக்கையை நான் வரவேற்கிறேன்," என்று முகமது யூசுப் கூறியுள்ளார்.