📅 Sunday, 06 September 2026 IST | ஆவணி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 06, 2026 08:03 PM

சிங்கப்பூரில் அடுத்த 24 மணி நேரத்திற்கு புகைமூட்ட ஆபத்து தொடரலாம்

சிங்கப்பூரில் அடுத்த 24 மணி நேரத்திற்கு புகைமூட்ட ஆபத்து தொடரலாம்

சிங்கப்பூரில் அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றின் தரம் மிதமான நிலையிலிருந்து ஆரோக்கியமற்ற நிலைக்குச் செல்லக்கூடும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 6)வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி,நாட்டின் 24 மணி நேரக் காற்றுத் தூய்மைக்கேடு குறியீட்டு எண் (PSI) 73 முதல் 87 வரை மிதமான அளவில் பதிவானது.

மத்திய பகுதியில் சனிக்கிழமை இரவு 103 என்ற ஆரோக்கியமற்ற நிலையை எட்டியிருந்த குறியீட்டு எண், ஞாயிறு மாலை 6 மணிக்கு 87 ஆகக் குறைந்தது. மற்றப் பகுதிகளிலும் காற்றின் தரம் வடக்கு, 73, தெற்கு, 74, கிழக்கு, 86, மேற்கு, 83, என மிதமான அளவிலேயே உள்ளது.

காற்றுத் தூய்மைக்கேடு குறியீட்டு எண் 101 முதல் 200 வரை பதிவானால் அது ஆரோக்கியமற்ற நிலையாகக் கருதப்படுகிறது. அந்தச் சமயங்களில் பொதுமக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூரில் வறண்ட, காற்றோட்டமான வானிலை நிலவியதாகத் தெரிவித்த வாரியம், தெற்கு, மத்திய சுமத்ரா, மேற்கு கலிமந்தான் பகுதிகளில் உள்ள காட்டுத் தீயிலிருந்து எழும்பும் அடர்ந்த புகைமூட்டம் சிங்கப்பூரை நோக்கி வருவதாகக் குறிப்பிட்டது.

வரும் நாள்களில் வறண்ட வானிலையுடன் தென்கிழக்கு அல்லது தெற்கு திசையிலிருந்து காற்று வீசக்கூடும் என்பதால், காட்டுத் தீ நீடித்தால் புகைமூட்டப் பாதிப்பு தொடரும் ஆபத்து உள்ளது.

2023ஆம் ஆண்டிற்குப் பிறகு சிங்கப்பூரில் காற்றுத் தூய்மைக்கேடு குறியீடு ஆரோக்கியமற்ற நிலையை எட்டியிருப்பது இதுவே முதன்முறையாகும்.