📅 Friday, 18 September 2026 IST | புரட்டாசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News September 18, 2026 08:33 AM

ஒதுங்கிய PAK., US.. இஸ்ரேலுடன் இணையும் சவூதி.. மத்திய கிழக்கில் மாறும் களம்!

ஒதுங்கிய PAK., US.. இஸ்ரேலுடன் இணையும் சவூதி.. மத்திய கிழக்கில் மாறும் களம்!

ஒதுங்கிய PAK., US.. இஸ்ரேலுடன் இணையும் சவூதி.. மத்திய கிழக்கில் மாறும் களம்!

ஏமன் நாட்டின் முக்கியப் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, அங்கிருந்து சவூதியின் மீது ஹவுதி அமைப்பினர் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்தப் பகுதிகளில் ஹவுதிகள் தாக்குதல் நடத்தியதால், சவூதியின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சவூதி அரேபியா இஸ்ரேலின் உதவியை நாடியிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஏமனின் நிலப்பரப்பில் ஹவுதிகள் கைப்பற்றிய பகுதிகள்

மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிராக ஒரு தாக்குதல் நடைபெற்றுவரும் நிலையில், மறுபக்கம் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்பினர் ஏமன் மீது நடத்தப்படும் அடுத்தடுத்த தாக்குதல்களால் சவூதி சற்றே நிலைகுலைந்துள்ளது என்றே சொல்லலாம். குறிப்பாக, சமீபத்திய தாக்குதலில் ஹவுதி அமைப்பினர் ஏமனின் நிலப்பரப்பில் உள்ள சில பகுதிகளைக் கைப்பற்றியுள்ளனர்.

1. ஏமனின் தலைநகரான சனா (Sanaa) மற்றும் சாடா (Saada),

2. அடுத்து, அல்-ஜவ்ஃப் (Al-Jawf), ஹஜ்ஜா (Hajjah) ஆகிய பகுதிகள்

3. கடல்வழிப் பாதையும் துறைமுகமும் ஆன மொகா (Mokha) மற்றும் துபாப் (Dhubab) கரைப்பகுதி

4. செங்கடலின் நுழைவாயிலில் அமைந்துள்ள மிக முக்கியமான மயூன்/பெரிம் தீவு (Perim Island / Mayun)

ஹவுதியின் தாக்குதலில் சவூதியில் பாதிக்கப்பட்ட பகுதிகள்...

1. மெக்கா, ஜித்தா (Jeddah)

2. தாயிஃப் (Taif)

3. அபஹா (Abha)சர்வதேச விமான நிலையம்

4. எண்ணெய் விநியோக முனையங்களான நஜ்ரான் மற்றும் ஜிசான் (Najran & Jizan)

5. கமீஸ் முஷைத் (Khamis Mushait)-இல் உள்ள 'கிங் காலித்' வான்படைத் தளம்

6. சவூதி அரம்கோ (Aramco) சுத்திகரிப்பு ஆலை மற்றும் இயற்கை எரிவாயு நிலையங்கள்

7. கிழக்கு மேற்காகக் கொண்டுசெல்லப்படும் முக்கிய எண்ணெய்க் குழாய்கள்

மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம்

இந்தப் பகுதிகளில் ஹவுதிகள் தாக்குதல் நடத்தியதால், சவூதியின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ஹவுதி ராணுவ நடவடிக்கைகளுக்கு, சவூதி பதிலடி கொடுத்துவந்தாலும் அதைச் சமாளிக்க முடியாமல் திணறிவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி, இக்கட்டான நிலையில் தவிக்கும் சவூதி அரேபியாவுக்கு, மெக்கா கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளும் உதவ முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.

1. கடந்த ஆக.7ஆம் தேதி சவூதி அரேபியாவில் கையெழுத்தானது.

2.சவூதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகள் இதில் கையெழுத்திட்டன.

3. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், துருக்கி அதிபர் ரசிப் தயிப் எர்டோகன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் ஆகியோர் கூட்டாக இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

4. சவூதி அரேபியாவின் பொருளாதார வலிமை, துருக்கியின் மேம்பட்ட இராணுவத் தொழில்நுட்பம் மற்றும் பாகிஸ்தானின் அணுஆயுத திறன் ஆகியவை இந்த ஒப்பந்தத்தின் ஒருங்கிணைப்பு

5. இந்த ஒப்பந்தப்படி, ’சவூதி, பாகிஸ்தான், துருக்கி ஆகிய மூன்று நாடுகளில் எந்த நாடுமீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், அவை மூன்று நாடுகள்மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாக கருதப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான், தற்போது சவூதி தாக்குதலுக்கு இரையாகி வரும் நிலையில் ஒப்பந்த நாடுகளே கைவிரித்திருப்பது கேள்விக்குறியாகி உள்ளது. இதுதொடர்பாக விளக்கமளித்த பாகிஸ்தான்,

1. தனது படைகளைச் சவூதி எல்லைப் பாதுகாப்பிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்

2. ஏமனுக்குள் இறங்கி நேரடியாகப் போரிட முடியாது

- என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

இஸ்ரேலின் உதவியை நாடிய சவூதி அரேபியா!

அதேபோல், இந்த கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் இன்னும் துருக்கிய நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வ ஒப்புதல் பெறாததால், அதுவும் ராணுவ நடவடிக்கையில் இறங்க தயக்கம் காட்டி வருகிறது. இந்த நிலையில்தான், சவூதி அரேபியா அமெரிக்காவின் உதவியை நாடியது. ஆனால், அமெரிக்காவோ, ‘இன்னொரு போரை மத்திய கிழக்கில் தொடங்க முடியாது’ என அறிவித்துவிட்டது. ஆனாலும், உளவுத் தகவல்களையும், ராணுவ ஆலோசனைகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

இப்படி, தாம் நம்பிய நட்பு நாடுகள் எல்லாம் ஒரேநேரத்தில் கைவிரித்துவிட்ட நிலையில் சவூதி விழி பிதுங்கி நிற்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே, சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட, சண்டைக்காரன் காலிலேயே விழலாம் என எண்ணிய சவூதி, ஹவுதி அமைப்பினரிடம் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாகவும் செய்திகள் வெளியாகின. இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. தற்போது சவூதி அரேபியா இஸ்ரேலின் உதவியை நாடியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இஸ்ரேலை முறைப்படி இராஜதந்திர ரீதியாக அங்கீகரிக்காவிட்டாலும், அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் மத்தியஸ்தம் மூலம் உதவி கோரியுள்ளது. செங்கடல் பகுதியில் ஹவுதிகளின் நகர்வுகள், வான்வழி அச்சுறுத்தல்கள் மற்றும் அவர்களின் தாக்குதல் திட்டங்களை முன்கூட்டியே கண்டறிய இஸ்ரேலின் அதிநவீன ரேடார் மற்றும் உளவு அமைப்புகளின் உதவியை சவூதி நாடியுள்ளது.

இதற்கு முன்பு, ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தியபோது, அந்நாடு இஸ்ரேலின் உதவியை நாடியிருந்தது. தற்போது, அதுபோலவே சவூதியும் இஸ்ரேலின் ஆதரவை எதிர்பார்த்துள்ளது. சவூதி அரேபியா மற்றும் இஸ்ரேல் இடையே உருவாகி வரும் இந்த ரகசிய ஒத்துழைப்பு உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது