கே.என்.நேரு வீட்டில் சோதனை புதிய அரசின் பூச்சாண்டிகளுக்கு அஞ்சிட மாட்டோம்: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
கே.என்.நேரு வீட்டில் சோதனை புதிய அரசின் பூச்சாண்டிகளுக்கு அஞ்சிட மாட்டோம்: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் சோதனைக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். புதிய அரசின் பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சிட மாட்டோம் என்று எச்சரித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது; சட்டமன்றக் கூட்டத்தொடரும் நடந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில், முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு மீதான சோதனை நடவடிக்கையை தவெக அரசு மேற்கொண்டுள்ளது. ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து, சட்டமன்ற வளாகத்திலேயே அவர்களை தம் கட்சியில் சேர்த்ததையும் குதிரை பேரம் நடத்தியதையும், அது தொடர்பான புகார்களில் லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையைக் கூட பதியாததையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவர்.
இந்திய ஐனநாயகத்தின் இருண்ட பக்கமாய் இந்த போக்கு தொடரும் நிலையில் வழக்கம்போல் திசைதிருப்பும் நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது இந்த ரீல்ஸ் அரசு. கே.என்.நேருவும், திமுகவும் புதிய அரசின் இத்தகைய பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சிட மாட்டோம். சட்டத்தின் வழியில் அனைத்தையும் எதிர்கொண்டு வெல்வோம். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.