சட்டப்பேரவை மாண்போடு நடக்கிறதா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி
சட்டப்பேரவை மாண்போடு நடக்கிறதா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி
சென்னை: சட்டப்பேரவை மாண்போடு நடக்கிறதா என்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, மீட்புப் பணிகள் துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை விவாதங்களுக்கு பதில் அளித்து முதல்வர் விஜய் நேற்று முன்தினம் பேசினார். அப்போது முதல்வர் ஜோசப் விஜய், திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பேரவையில் இல்லாதவர்களை பற்றியும், நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் வழக்குகள் பற்றியும் முதல்வர் விஜய் பேசினார்.
முதல்வரின் இந்த பேச்சை நீக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் நேற்று திமுக எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர். ஆனால், முதல்வர் விஜய் பேசிய கருத்துகளை நீக்க சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் மறுத்து விட்டார். இதையடுத்து சபாநாயகரை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பிய திமுக எம்எல்ஏக்கள் அறைக்காவலர் மூலம் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம், ‘‘சட்டமன்றம் மாண்போடு நடைபெறுகிறா? சட்டமன்றத்தில் நீங்கள் நெடுங்காலம் அனுபவம் கொண்டவர்? இப்ப இருக்கும் சட்டமன்றம் மாண்போடு இருக்கிறதா?’’ என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது மு.க.ஸ்டாலின், ‘‘சட்டப்பேரவை மாண்போடு நடக்கிறதா என்று கேள்வி எழுப்பக்கூடிய அளவில்தான் பேரவை நடக்கிறது” என்றார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அளித்த பேட்டியில், ‘‘முதல்வர் பேச்சு குறித்து அவர்கள் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்த கம்யூனிஸ்ட்கள் கட்சிகள் வெளுத்து வாங்கியுள்ளது. தற்போதைய காலக்கட்டத்தில் எப்படி வழக்கு தொடுக்கிறார்களோ? அதேபோல அப்போது தொடுத்தார்கள். ஆனால் நீதிமன்றத்தில் எங்களை குற்றமற்றவர் என்று அறிவித்து விட்டார்கள். இதற்கு மேல் அதுதொடர்பாக கேள்வி கேட்பது முட்டாள் தனம்” என்றார்.