“அவங்க என்ன பண்ண உங்களுக்கு என்ன?”
“அவங்க என்ன பண்ண உங்களுக்கு என்ன?” – த்ரிஷாவிற்கு ஆதரவாக அம்பிகா...!
நடிகை த்ரிஷா குறித்து சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்களுக்கு நடிகை அம்பிகா காட்டமாக பதிலளித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் லண்டன் சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், அங்குள்ள சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெற்ற கார் பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தப் போட்டியில் நடிகர் அஜித்தும் பங்கேற்றிருந்தார்.
இந்த கார் பந்தயத்தைக் காண நடிகை த்ரிஷாவும் சில்வர்ஸ்டோன் சென்றிருந்தார். அப்போது முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா ஆகியோர் ஒன்றாக கார் பந்தயத்தைப் பார்த்த காட்சிகள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்றன.
இதையடுத்து, த்ரிஷாவின் லண்டன் பயணம் மற்றும் அவர் பந்தயத்தைப் பார்க்கச் சென்றது தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டன.
இந்த நிலையில், தனியார் யூடியூப் சேனலுக்கு நடிகை அம்பிகா அளித்த பேட்டியில், த்ரிஷா குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
த்ரிஷா லண்டனுக்கு படப்பிடிப்பு தொடர்பாகச் சென்றிருக்கலாம் என்றும், அவர் அங்கு தனது விருப்பப்படி உணவகத்திற்குச் சென்று சாப்பிடுவதிலோ அல்லது வேறு இடங்களுக்குச் செல்வதிலோ மற்றவர்கள் கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் இல்லை என்றும் அம்பிகா தெரிவித்துள்ளார்.
ஒருவர் லண்டனில் பீட்சா சாப்பிட்டாலும், மசாலா தோசை சாப்பிட்டாலும், தமிழ்நாட்டில் தயிர் வடை சாப்பிட்டாலும் அது அவருடைய தனிப்பட்ட விஷயம் எனக் குறிப்பிட்ட அம்பிகா, அதுபற்றி மற்றவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தன்னைப் பற்றிய தனிப்பட்ட விஷயங்களை ஒருவர் தேவையில்லாமல் விமர்சித்தால் அது தனக்கு பிடிக்குமா என்றும் அம்பிகா கேள்வி எழுப்பினார். நாம் பிறரிடம் எதிர்பார்க்கும் நியாயத்தை, பிறருக்கும் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“மற்றவர்களை விமர்சிப்பது நமது வேலை இல்லை”
தேவையில்லாமல் மற்றொருவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறிய அம்பிகா, த்ரிஷாவைச் சுற்றி எழுப்பப்படும் தேவையற்ற கேள்விகளுக்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
அம்பிகாவின் இந்தப் பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. த்ரிஷா தொடர்பாக வைரலான வீடியோக்களுக்கு மத்தியில், அவருக்கு ஆதரவாக அம்பிகா தெரிவித்துள்ள இந்தக் கருத்துகள் பேசுபொருளாகியுள்ளன.