தமிழில் கும்பாபிஷேகம் நடத்த தாக்கலான வழக்கு தள்ளுபடி
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களின் கும்பாபிஷேக விழாவில், சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் இடம் பெற தாக்கலான வழக்கை, உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த, நீதிபதி சி.சரவணன் பிறப்பித்த உத்தரவு:
தமிழகத்தில் ஆகம கோவில்களை கண்டறிய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவ்வழக்கு நிலுவையில் உள்ளது.
கோவில்களில் சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் மந்திரங்கள் இடம் பெறுவது குறித்து தமிழக அரசு குழு அமைக்க வேண்டும் என, 2021ல் இந்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது; அதன்படி, குழு அமைக்கப்பட்டுள்ளது.
சட்டம் சரியாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்வது தான் நீதிமன்றத்தின் பணி. சட்டத்தை நீதிமன்றத்தால் உருவாக்க முடியாது.
அரசு தான் சட்டத்தை உருவாக்க முடியும். இச்சூழலில் மனுதாரர்கள் கோரும் நிவாரணத்தை வழங்க முடியாது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
இவ்வாறு உத்தரவிட்டார்.