சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் முறையாகவும் சரியாகவும் நடத்தப்பட வேண்டும்?
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதவது;
சாதிவாரி கணக்கெடுப்பில் உள்ள குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடிக்கு விரிவான கடிதம் எழுதியிருந்தனர். ஆனால், அவர்களின் கோரிக்கைகளை வழக்கம் போல் முற்றிலும் அலட்சியம் செய்து வருகிறது மோடி அரசு.
ஒருபுறம், ஜம்மு-காஷ்மீர், இமாச்சல் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் கணக்கெடுப்புப் பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டனர்; மறுபுறம், தேர்தல் வரவிருக்கும் மாநிலங்களில் அவசர அவசரமாகக் கணக்கெடுப்பை முன்கூட்டியே நடத்தப் பார்க்கிறது நரேந்திர மோடி அரசு. காங்கிரஸ் கட்சிதான் இதற்காகத் தொடக்கம் முதலே சமரசமின்றி குரல் கொடுத்து வருகிறது; இப்போது மோடி அரசின் சதியை மக்களிடம் அம்பலப்படுத்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி களமிறங்குகிறது !
சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் முறையாகவும் சரியாகவும் நடத்தப்பட வேண்டும் ?
* நாட்டின் சரிபாதிக்கும் அதிகமான மக்கள் ஓ.பி.சி பிரிவினர்தான்; ஆனால் பல ஆண்டுகளாக சரியான எண்ணிக்கை தெரியாமல், அதிகாரத்திலும் உரிமையிலும் புறக்கணிக்கப்பட்ட பெரும்பான்மையாகவே தொடர்கிறார்கள். உண்மையான பலம் அரசு ஆவணங்களில் பதிவானால்தான் நமக்குரிய சமூகநீதி முழுமையாகக் கிடைக்கும்.
* அரசியலமைப்புச் சட்டம் 340 பிற்படுத்தப்பட்டோரின் நிலையை ஆராய்ந்து அவர்களுக்கு உரிய உரிமைகளை வழங்க வழிவகை செய்கிறது. ஆனால், நம்மிடம் தெளிவான புள்ளிவிவரங்கள் இல்லாதவரை அந்தச் சட்ட விதியை அரசு முறையாக நடைமுறைப்படுத்த முடியாது; சரியான கணக்கெடுப்பு மட்டுமே அதைச் சாத்தியமாக்கும்.
* அரசின் நலத்திட்டங்களும் நிதி ஒதுக்கீடுகளும் வெறும் யூகத்தின் அடிப்படையில் செல்லாமல், உண்மையாகவே தேவைப்படும் தகுதியான ஒவ்வொரு பிற்படுத்தப்பட்ட குடும்பத்திற்கும் போய்ச் சேர வேண்டும் என்றால், அதற்குத் தெளிவான மக்கள் தொகைத் தரவு மிக மிக அவசியம்.
* மத்திய அரசு கொண்டுவரும் குழப்பமான கேள்வி முறையால், ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தங்களின் சாதிப் பெயரை வெவ்வேறு எழுத்துக்களிலோ, உச்சரிப்புகளிலோ எழுதும்போது அது தனித்தனிப் பிரிவுகளாகப் பதிவாகிவிடும். இதனால் ஒட்டுமொத்த ஓ.பி.சி சமுதாயத்தின் எண்ணிக்கையும் பலமும் கடுமையாக உடைக்கப்பட்டு சிதையும் ஆபத்து உள்ளது.
‘சாதிவாரிக் கணக்கெடுப்பில் முறைகேடு! ஓ.பி.சி இடஒதுக்கீட்டுக்குப் பெருங்கேடு ! " என்ற முழக்கத்தோடு மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்கிறோம்.
மத்திய அரசின் இத்தகைய திட்டமிடப்படாத, முறைகேடான கணக்கெடுப்பால் மக்களின் வரிப்பணம் ஆயிரக்கணக்கான கோடிகள் வீணடிக்கப்படுவதுதான் மிச்சம் ! பயன்படாத, தவறான புள்ளிவிவரங்களுக்காக மக்களின் வரிப்பணத்தை பாழாக்குவதை விடுத்து, தற்போதைய கேள்வித்தாள்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் துறைசார் வல்லுநர்களுடன் முறையான கலந்தாலோசனை நடத்தி, புதிய, வெளிப்படையான சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் !
வரும் செப்டம்பர் 17 அன்று சென்னையில் ஆசிரியர் கி. வீரமணி அவர்களால் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்படும் இந்தப் பரப்புரை, தமிழகத்தின் அனைத்து மண்டலங்களையும் உள்ளடக்கி சென்னை, திண்டுக்கல், அரியலூர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, விருதுநகர், ராணிப்பேட்டை, ஈரோடு ஆகிய 10 மாவட்டங்களிலும் நடைபெறுகிறது. நடைபெறும் அனைத்து டவுன் ஹால் கூட்டங்களிலும் பொதுமக்களும், பத்திரிகையாளர்களும் இக்குளறுபடிகளை ஞசு ஊழனந வழியாக நேரலையாக அனுபவித்து உணரும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டு, ஈரோட்டில் இந்த விழிப்புணர்வு பயணம் நிறைவடையும்.
பா.ஜ.க. அரசின் இந்தத் திட்டமிட்ட குளறுபடிகளால் தமிழ்நாட்டின் 69 சதவீத இடஒதுக்கீடு பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளது; பிற்படுத்தப்பட்ட மக்களைப் பின்னுக்குத் தள்ளி அவர்களின் உரிமைகளைப் பறிக்கும் பா.ஜ.க.வின் இந்தச் சதியை முறியடிக்க நாம் அனைவரும் மிகத் துரிதமாகச் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் ! சமூக நீதியையும் நமது இடஒதுக்கீட்டு உரிமைகளையும் பாதுகாக்கக் காங்கிரஸ் தொடர்ந்து சமரசமின்றிப் போராடும்!”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.