புதிய தலைமை செயலக விவகாரம்; பட்டினப்பாக்கம் மீனவ அமைப்பினரை சந்தித்து பேச முதல்வர் விஜய் முடிவு
சென்னை: சென்னை, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டுவது தொடர்பாக, மீனவர் அமைப்புகளை சந்தித்து, முதல்வர் விஜய் கருத்து கேட்க உள்ளார்.
சென்னை, பட்டினப்பாக்கம் லுாப் சாலையில், 1,200 கோடி ரூபாயில் புதிய தலைமை செயலகம் கட்ட, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதுகுறித்த அரசாணையையும் வெளியிட்டுள்ளது. அதற்காக, வீட்டுவசதி, வருவாய் துறைகள் மற்றும் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான, 25.5 ஏக்கர் நிலம் கையகப்படுத்த பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய தலைமை செயலகம் கட்டினால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என, பல்வேறு மீனவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டும் முடிவை கைவிட வேண்டும் என, எதிர்க்கட்சிகளும், த.வெ.க., கூட்டணி கட்சிகளும் வலியுறுத்தி உள்ளன.
இதையடுத்து, எதிர்ப்பு தெரிவித்து வரும் மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகளை, அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவினர், இன்னும் ஓரிரு நாளில் அழைத்து பேச்சு நடத்த உள்ளனர். மேலும், முதல்வர் விஜய் தலைமையில், மீனவ அமைப்புகளிடம் கருத்து கேட்கப்பட உள்ளது. அதன் பின் புதிய தலைமை செயலகம் திட்டம் தொடருமா, ரத்தாகுமா என்பது தெரியவரும் என, தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.