பெரியார், அண்ணா பிறந்த நாள் பேரணிக்கு அனுமதி மறுப்பு: "யாரைத் திருப்திப்படுத்த?"
பெரியார், அண்ணா பிறந்த நாள் பேரணிக்கு அனுமதி மறுப்பு: "யாரைத் திருப்திப்படுத்த?" - உதயநிதி கேள்வி
பெரியார், அண்ணா பிறந்தநாள் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்த விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது.
பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர தி.மு.க சார்பில் அமைதிப் பேரணி நடத்த, காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டிருக்கிறது.
அதற்கு குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் R.S. சிவகுமார், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனுமதி அளிக்க மறுத்துள்ளார்.
இதற்கு திமுக தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் தி.க. சார்பில் செப்டம்பர் 17-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கும், குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.கழகம் உள்ளிட்ட கட்சிகள் நடத்தவிருந்த பேரணிக்கும், இந்த Circus அரசின் காவல்துறை அனுமதி மறுத்து இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, வலதுசாரி அமைப்புகளின் பேரணிகளுக்கு அனுமதி வழங்கிவிட்டு, தமிழ்நாட்டைச் செதுக்கிய பெரியார் – அண்ணாவின் பிறந்த நாள் பேரணிகளுக்கு அனுமதி மறுப்பது ஏன்? பெரியாரையும், அண்ணாவையும் கொள்கைத்தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர், யாரைத் திருப்திப்படுத்த இதைச் செய்கிறார்?
காவல்துறை, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லை அவரது காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா? பெரியார் – அண்ணாவைப் புறக்கணிக்கும் Reels முதலமைச்சர், அவருடைய அடிமைத்தனத்தையும் - ஆணவத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, உடனே இந்தப் பேரணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.