📅 Sunday, 20 September 2026 IST | புரட்டாசி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News September 20, 2026 10:03 AM

பாகிஸ்தான் அமைச்சர் நக்வியிடம் பதக்கம் வாங்குமா இந்தியா? ஆசிய விளையாட்டில் புதிய சர்ச்சை

பாகிஸ்தான் அமைச்சர் நக்வியிடம் பதக்கம் வாங்குமா இந்தியா? ஆசிய விளையாட்டில் புதிய சர்ச்சை

பாகிஸ்தான் அமைச்சர் நக்வியிடம் பதக்கம் வாங்குமா இந்தியா? ஆசிய விளையாட்டில் புதிய சர்ச்சை

நகோயா: ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் தங்கம் வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ளன. இந்த நிலையில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மோசின் நக்வி இந்திய அணிக்கு பதக்கங்களை வழங்கினால் என்ன நடக்கும் என்ற விவாதம் எழுந்துள்ளது. அதற்கான சாத்தியம் குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கம் முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டி என்பது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலோ அல்லது இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ-யோ நடத்தும் தனிப்பட்ட தொடர் அல்ல. இது ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலால் நடத்தப்படும் சர்வதேச விளையாட்டுத் தொடர் ஆகும். எனவே, பதக்கம் வழங்குபவர்கள் பட்டியலில் இருந்து குறிப்பிட்ட ஒரு நபரை நீக்க வேண்டும் என்றோ அல்லது தவிர்க்க வேண்டும் என்றோ இந்தியா முன்கூட்டியே நிபந்தனை விதிக்க முடியாது என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

முன்னதாக 2025 ஆடவர் ஆசிய கோப்பை மற்றும் 2026 மகளிர் ஆசிய கோப்பையின் போது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரான மோசின் நக்வியிடம் இருந்து கோப்பைகளைப் பெற இந்திய அணி மறுத்ததாக சர்ச்சை எழுந்தது. அதேபோன்ற ஒரு இக்கட்டான சூழல் இப்போதும் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அதே சமயம், ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் விதி எண் 66 இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணக்கூடும். இந்த விதியின்படி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் ஷேக் ஜோன் பின் ஹமத் அல் தானி அல்லது அவரால் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்படும் பிரதிநிதிகளே பதக்கங்களை வழங்குவார்கள். இதனால் நக்வி பதக்கம் வழங்கும் வாய்ப்பு தவிர்க்கப்படவும் இடமுள்ளது. கிரிக்கெட்டுக்கு சம்பந்தம் இல்லாத அதிகாரிகளும் கூட பதக்கங்களை வழங்க வாய்ப்பு உள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய ஆடவர் அணியும், மகளிர் அணியும் களத்திற்கு வெளியே நடக்கும் இத்தகைய சர்ச்சைகளைக் கடந்து, தங்கப் பதக்கத்தைத் தக்கவைப்பதில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருகின்றன.