📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 15, 2026 08:33 AM

"நக்வி எதிர்ப்பே தெரிவிக்கலை".. ஆசிய கோப்பை சர்ச்சை.. பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா விளக்கம்

"நக்வி எதிர்ப்பே தெரிவிக்கலை".. ஆசிய கோப்பை சர்ச்சை.. பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா விளக்கம்

"நக்வி எதிர்ப்பே தெரிவிக்கலை".. ஆசிய கோப்பை சர்ச்சை.. பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா விளக்கம்

துபாய்: 2026 மகளிர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணி, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரான பாகிஸ்தான் அமைச்சர் மோசின் நக்வியிடம் கோப்பையைப் பெற மறுத்ததற்கு அவர் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்று பிசிசிஐ-யின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பை வென்றது இந்திய மகளிர் அணி. ஆனால், பாகிஸ்தான் அமைச்சராக இருக்கும் மோசின் நக்வியிடம் இருந்து கோப்பையை பெற மாட்டோம் என இந்திய அணி முடிவு செய்தது. அதனால் நக்வி கோப்பையை வழங்கவில்லை. இந்திய அணி கோப்பை பெறாமலேயே நாடு திரும்பியது. இந்திய மகளிர் அணியுடன் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த ராஜீவ் சுக்லா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், "மோசின் நக்வியிடம் இருந்து கோப்பையைப் பெறுவதில்லை என்பது பிசிசிஐ எடுத்த கூட்டு முடிவாகும். இந்த முடிவை நாங்கள் முன்கூட்டியே இந்திய அணிக்குத் தெரிவித்திருந்தோம். இதற்கு நக்வியும் எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. அவர் இலங்கை அணிக்கு வழங்க வேண்டிய பரிசை வழங்கிவிட்டு அமைதியாகக் கிளம்பிவிட்டார்" என்றார்.

மேலும், "நாட்டின் நலன், இந்திய மக்களின் உணர்வுகள் மற்றும் கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஆண்கள் அணியின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது. கடந்த 2025-ல் ஆண்கள் அணி வென்ற ஆசிய கோப்பையே இன்னும் இந்தியாவிற்கு வந்து சேராமல் நிலுவையில் உள்ளது. அப்படி இருக்கும்போது நாங்கள் எங்கள் உறுதியான நிலைப்பாட்டில் இருந்து எப்படி பின்வாங்க முடியும்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

துபாய் மைதானத்தில் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா மோசின் நக்வியுடன் பேசியது பொது இடத்தில் நடந்த வழக்கமான ஒரு சந்திப்பு மட்டுமே என்று குறிப்பிட்ட ராஜீவ் சுக்லா, சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனைகளைப் பாராட்டியதோடு, அடுத்ததாக ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் இந்திய அணி வெற்றி நடை போடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.