ஒரு குழந்தைக்கு உலகைக் கற்றுத் தருவது... தாய்மொழி தான்!: தேசிய கல்விக் கொள்கையின் நோக்கமே தாய்மொழியை கற்பது தான் ;ஹிந்தி மொழி மா
புதுடில்லி: ''ஒரு குழந்தைக்கு உலகை கற்றுத் தருவது தாய்மொழி தான். தேசிய கல்வி கொள்கையின் நோக்கமே தாய்மொழியை கற்பது தான்,'' என, ஹிந்தி தின விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
'ஹிந்தி திவஸ்' என்ற 'ஹிந்தி தினம்' ஆண்டுதோறும் செப்., 14ல் கொண்டாடப் படுகிறது. கடந்த 1949ல் ஹிந்தியை அதிகாரப்பூர்வ மொழியாக அரசியல் நிர்ணய சபை இதே நாளில் ஏற்றுக் கொண்டது. அதை நினைவுகூரும் வகையில், 'ஹிந்தி திவஸ்' கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நாளையொட்டி, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் நேற்று நடந்த ஹிந்தி மொழி மாநாட்டில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது:
அணுகும் விதம்
மொழி என்பது வெறும் தகவல் பரிமாற்றத்துக்கான கருவி மட்டுமல்ல; சமூகத்தின் நினைவுகளையும், உணர்வுகளையும் தாங்கி நிற்கக்கூடியவை. நாட்டின் பல்வேறு பிரிவினரையும், சமூகங்களையும் இணைக்கும் மொழியாக ஹிந்தி முக்கிய பங்காற்றி வருகிறது. ஆகவே, இந்திய மொழிகளுக்கும், தேசிய ஒற்றுமைக்கும் இடையிலான முக்கிய இணைப்பாகவே ஹிந்தி மொழியை பார்க்க வேண்டும்.
இந்திய மொழிகளின் கண்ணியம், வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தபடியே முன்னேறும்போது தான், ஹிந்தி மொழியின் வளர்ச்சியும் அர்த்தமுள்ளதாக அமையும். என் தாய்மொழி குஜராத்தி என்றாலும், நாட்டின் பிற பகுதிகளில் உள்ள மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள, ஹிந்தி எனக்கு மிகவும் உதவுகிறது.
பகுப்பாய்வு திறன்
அதனால் தான், புதிய தேசிய கல்வி கொள்கையின் கீழ், தொடக்க கல்வியை தாய்மொழியிலேயே கற்பிப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. தாய்மொழியில் கல்வி கற்றால் மட்டுமே, குழந்தைகளின் சிந்தனை திறனும், பகுப்பாய்வு திறனும் மேம்படும். எனவே, தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தவும், அனைத்து இந்திய மொழிகளையும் சமமாக வளர்த்தெடுக்கவும், அரசியல் பேதங்களை கடந்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அமித் ஷா பேசினார்.