மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்; முன்னாள் ஆசிரியருக்குச் சிறை
சிங்கப்பூரில் 14 வயது மாணவியைப் பாலியல் துன்புறுத்தல் செய்த முன்னாள் உடற்பயிற்சி ஆசிரியருக்கு 16 ஆண்டு சிறைத் தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவங்கள் 2022ஆம் ஆண்டு தொடங்கின. அப்போது பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 14 வயது. 45 வயதான அந்த நபர், சிறுமியின் உடற்பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றினார்.
சிறுமியை இன்ஸ்டகிராம், டெலிகிராம் செயலிகள் மூலம் தொடர்புகொண்ட அவர், ஹோட்டல் அறைகளில் சந்திக்கச் சம்மதிக்க வைத்துள்ளார்.
அதன்படி, பலமுறை ஹோட்டல் அறைகளில் வைத்து அந்தச் சிறுமியைப் பாலியல் ரீதியாக அவர் துன்புறுத்தியுள்ளார்.
2023ஆம் ஆண்டு ஜனவரியில் பள்ளியில் நடந்த முகாம் ஒன்றிலும் இத்தகைய பாலியல் அத்துமீறல்கள் நடந்துள்ளன.
ஆசிரியர் தன்னிடம் அதீத உரிமை கொண்டாடுவதாக உணர்ந்த அந்த மாணவி, ஜனவரி இறுதியில் அவருடனான தொடர்பைத் துண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர், மாணவியை மிரட்டியுள்ளார்.
இதையடுத்து, மாணவியின் தோழி பிப்ரவரி 7ஆம் தேதி வேறொரு ஆசிரியரிடம் இதுகுறித்து புகார் அளித்தார். அதன் பிறகு காவல்துறையில் புகார் செய்யப்பட்டது.
தீர்ப்பு வழங்கும்போது இந்தக் குற்றங்கள் திட்டமிட்டுச் செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைப் பாதுகாக்கும் வகையில், முன்னாள் ஆசிரியரின் பெயரை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.