📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 15, 2026 12:33 PM

கோவை மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்

கோவை மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்

மேட்டுப்பாளையத்தில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை.

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி சார்பில் 38-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் ஸ்ரீ சக்தி விநாயகர் கோயில், மகாதேவபுரம், எஸ்.எம்.நகர், சந்தை திடல், ராமசாமி நகர் உள்ளிட்ட 62 இடங்களில் அதிகாலை கணபதி ஹோமத்திற்கு பின்னர் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான சிறுமுகை, காரமடை உள்ளிட்ட பகுதிகளில் 272 விநாயகர் சிலைகள் இந்து முன்னனி சார்பில் பிரதிஷ்டை செய்யப்படுள்ளன. தொடக்க நிகழ்ச்சி பேருந்து நிலையம் ஸ்ரீ சக்தி விநாயகர் கோயிலில் இன்று காலை நடைபெற்றது. இந்து முன்னணி கோட்டச் செயலாளர் ராஜ்குமார் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

நகரில் 3 அடியில் இருந்து 10 அடி வரை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வருகின்ற செப்.16-ம் தேதி மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ரம்யா பாரதி உத்தரவின் பேரில், காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கோட்ட செயலாளர் ராஜ்குமார், “தமிழகத்தில் உள்ள ஐந்து கோயில்களுக்கு அசாம் மாநிலத்திலிருந்து யானைகள் கொண்டு வரப்பட உள்ளன. அதேபோல், மேட்டுப்பாளையம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற வன பத்தரகாளி அம்மன் கோயில் மற்றும் காரமடை அரங்கநாதர் கோயிலுக்கு யானைகள் வழங்க வேண்டும். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றார்.