கனிமொழி கருணாநிதி: தாயார் பெயரை இணைத்து அதிகாரபூர்வ பெயர் மாற்றம்
சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, தமது பெயரை ‘கனிமொழி ராஜாத்தி கருணாநிதி’ என்று மாற்றியுள்ளார்.
‘கனிமொழி கருணாநிதி’ என்று அறியப்பட்டு வந்த அவர், தற்போது தாயார் ராஜாத்தி அம்மாளின் பெயரைத் தமது பெயரின் நடுவில் இணைத்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் அரசிதழில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 9ஆம் தேதி நாளிதழில் வெளியிடப்பட்ட சட்டபூர்வ அறிவிப்பில், “1968 ஜனவரி 5ஆம் தேதி சென்னையில் பிறந்த கனிமொழி கருணாநிதி, இனி ‘கனிமொழி ராஜாத்தி கருணாநிதி’ என்ற பெயரில் அறியப்படுவார்” எனத் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற குறிப்புகளிலும் அதிகாரப்பூர்வமாக கனிமொழியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
அரசியலுக்குள் நுழைவதற்கு முன்னர் இலக்கியவாதியாக ‘கனிமொழி’ என்ற பெயரிலேயே மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டு வந்தார். அரசியலுக்கு வந்த பின்னர் கனிமொழியின் பெயரில் தந்தை கலைஞரின் பெயரும் சேர்க்கப்பட்டு ‘கனிமொழி கருணாநிதி’ என அழைக்கப்பட்டார்
தற்போது நாடாளுமன்ற திமுக குழுத் தலைவராகவும் முக்கியப் பொறுப்பு வகித்து வரும் நிலையில், தாயாரின் பெயரைத் தமது பெயருடன் இணைத்திருக்கும். கனிமொழியின் இந்த நடவடிக்கைக்குச் சமூக வலைத்தளங்களில் பரவலான வரவேற்பும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.