📅 Friday, 04 September 2026 IST | ஆவணி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 04, 2026 04:03 AM

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து- தலா ரூ.4 லட்சம் நிவாரணம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூனம்பட்டி பகுதியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதி அறிவித்தார் முதலமைச்சர் விஜய்.

இதுதொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், அனுப்பன்குளம் கிராமம் மற்றும் திருவில்லிபுத்தூர் வட்டம், விழுப்பனூர் கிராமம் ஆகிய பகுதிகளில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள்கள் தொழிற்சாலைகளில் இன்று (3.9.2026) எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்துகளில் அங்கு பணியிலிருந்த வத்திராயிருப்பு வட்டம், குன்னூர் பகுதியைச் சேர்ந்த திரு.ஈஸ்வரன் (வயது 56), த/பெ.குருவன் என்பவரும்; சிவகாசி வட்டம், சிலோன் காலனியைச் சேர்ந்த திரு.சக்திவேல் (வயது 55), த/பெ. சிதம்பரம் என்பவரும் பலத்த காயமுற்று உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன். மேலும், விழுப்பனூர் கிராமத்தில் நடந்த விபத்தில் பலத்த காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள திரு. காளிராஜ் (வயது 49), த/பெ.கருப்பையா மற்றும் லேசான காயமடைந்து அம்மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள திருமதி கருப்பாயி (வயது 47), க/பெ.ராஜேந்திரன், திருமதி மகாலட்சுமி (வயது 36), க/பெ. சந்தனம், திருமதி பவானி (வயது 49), க/பெ. இருளப்பன் மற்றும் திருமதி இருளாயி (வயது 70), க/பெ. சக்கணன் ஆகியோருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்விபத்துகளில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா நான்கு இலட்சம் ரூபாயும், பலத்த காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும், லேசான காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபர்களுக்குத் தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.