📅 Friday, 18 September 2026 IST | புரட்டாசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion September 17, 2026 08:34 PM

விநாயகருடன் தங்கச்சங்கிலியை சேர்த்து ஆற்றில் வீசிய ஓய்வு பெற்ற அரசு அதிகாரி

விநாயகருடன் தங்கச்சங்கிலியை சேர்த்து ஆற்றில் வீசிய ஓய்வு பெற்ற அரசு அதிகாரி

ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, விநாயகருடன் தங்கச்சங்கிலியை ஆற்றில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கடந்த திங்கட்கிழமை சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து, விநாயகர் சிலைகளை நீரில் கரைக்கும் நிகழ்வும் நடந்து வருகிறது. இந்த நிலையில், கடலூர் வண்ணாரப்பாளையத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 62). ஓய்வு பெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர்.

இவர் விநாயகர் சதுர்த்தியையொட்டி தனது வீட்டில் சிறிய அளவிலான விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்தார். மேலும் அந்த சிலைக்கு தனது 1½ பவுன் தங்கச்சங்கிலியை அணிவித்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டு வந்தார்.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்க முடிவு செய்தார். இதற்காக அவர் நேற்று காலை 9.30 மணி அளவில் கடலூர் தேவனாம்பட்டினம் அருகில் உள்ள உப்பனாற்றுக்கு சென்றார். அங்கு அவர் உப்பனாற்றின் பாலத்தில் தங்கச்சங்கிலியுடன் விநாயகர் சிலையை வைத்து பூஜை செய்து தண்ணீரில் தூக்கி வீசினார்.

தீயணைப்பு வீரர்கள்

அதன் பின்னர்தான் தங்கச்சங்கிலியை எடுக்காமல் ஆற்றில் வீசிவிட்டோமே என்ற நினைவு அவருக்கு வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராமமூர்த்தி, உடனே அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் தண்ணீரில் இறங்கி தங்கச்சங்கிலியை தேடத்தொடங்கினார். மேலும் இது பற்றி கடலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பேரில் தீயணைப்பு நிலைய வீரர்களும் விரைந்து வந்து மாலை 6 மணி வரை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ராமமூர்த்தி, சிலையை கரைத்த இடத்தையே பார்த்தபடி கவலையுடன் இருந்தார். ஆனால் விநாயகரும் கிடைக்கவில்லை. விநாயகருடன் சென்ற 1½ பவுன் சங்கிலியும் கிடைக்கவில்லை.

காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை சுமார் 8½ மணி நேர தேடுதலுக்கு பிறகும் நகை கிடைக்காததால் ராமமூர்த்தி ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, சிலையை கரைக்கச்சென்ற இடத்தில், விநாயகர் சிலையுடன் 'மறந்துபோய்' தங்கச்சங்கிலியை ஆற்றில் வீசிய சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.