வி.ஏ.ஓ.,வுக்கு லஞ்சம் கொடுக்க பிச்சையெடுத்த டிப் டாப் ஆசாமியால் பரபரப்பு
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் வி.ஏ.ஓ., வுக்கு லஞ்சம் கொடுக்க கூலிங் கிளாசுடன் டிப் டாப் ஆசாமி கையில் தட்டேந்தி பிச்சையெடுத்ததால் பரபரப்பு நிலவியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை அடுத்த கீழப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்சலீம் ஷேக், 45; நொனையவாடி கிராமத்தை சேர்ந்த இவரது மனைவியான தாஹிரோன், 40; குடும்பத்தில் உள்ள நிலத்திற்கு கூட்டு பட்டாவில் பெயர் சேர்க்கக் கோரி கடந்த மார்ச் மாதம் எலவனாசூர்கோட்டை வி.ஏ.ஓ.,விடம் மனு அளித்துள்ளார்.
இந்நிலையில், கூட்டு பட்டாவில் பெயர் சேர்க்க வி.ஏ.ஓ., 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக கூறி, அப்துல்சலீம் ஷேக், உளுந்துார்பேட்டை பஸ் நிலையத்தில் பொதுமக்களிடம் கையில் தட்டு ஏந்தி பிச்சை கேட்டார்.
மேலும் அவர், வாழ்க தமிழ், ஒழியட்டும் ஊழல், பூர்வீக சொத்தில் கூட்டு பட்டாவில் பெயர் சேர்க்க வி.ஏ.ஓ., லஞ்சம் கேட்டார். என்னிடம் பணம் இல்லை, அதனால் மக்கள் மத்தியில் பிச்சை எடுக்கிறேன் என பதாகை வைத்திருந்தார்.
வி.ஏ.ஓ., வுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக ஜீன்ஸ், பேண்ட் சட்டை அணிந்து கூலிங் கிளாசுடன் டிப்டாப்பாக வலம் வந்து பிச்சை எடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.