📅 Monday, 07 September 2026 IST | ஆவணி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 07, 2026 03:04 PM

‘த.வெ.க. குதிரை பேரம் நடத்தியதாக தவறான தகவலை பரப்புகிறார்கள்’

‘த.வெ.க. குதிரை பேரம் நடத்தியதாக தவறான தகவலை பரப்புகிறார்கள்’

திருவள்ளூர்,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முகம்மது அபுபக்கர் திருவள்ளூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சார்பாக வெற்றி பெற்றிருக்கக்கூடிய இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் பல்வேறு நிலைகளிலே ஆட்சியாளர்களுக்கு துணையாக நின்று சமுதாயத்தின் பிரச்சினைகளை களைவதில் சிறப்பாக செயலாற்றி வருகின்றார்கள்.

ஆனால் எதிரணியில் இருக்கக்கூடியவர்கள் அவ்வப்போது தவறான பிரசாரங்களை செய்து குழப்பங்களை ஏற்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள். எங்களுடைய வாணியம்பாடி எம்.எல்.ஏ. சையத் பாரூக் பாஷா பேசியது இன்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. அவர் எந்த கட்சியையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.

நடந்து முடிந்த இந்த சட்டமன்ற தேர்தலில் நிலையான ஆட்சியை யார் அமைப்பது என்ற குழப்பம் ஏற்பட்டு, காலதாமதம் ஆனதன் காரணமாக பல கட்சிகளும் ஆட்சி அமைப்பதற்கு முயற்சி செய்தார்கள். அதன் காரணமாக குதிரை பேரம் நடந்தது என்றுதான் அவர் சொல்லி இருக்கிறார்.

ஆனால் ஒட்டுமொத்தமாக த.வெ.க.தான் குதிரை பேரம் நடத்தியது என்ற தவறான தகவலை பரப்புகிறார்கள். அதனை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். தேர்தலுக்கு பிறகு நடந்த சூழ்நிலைகளை நாம் அலசி ஆராயும் பொழுது, அப்போது நடந்த விஷயங்களைப் பேசினால் மேலும் பிரச்சினைகள்தான் அதிகமாகும்.

அதை விடுத்து, இப்பொழுது அமைந்திருக்கின்ற இந்த ஆட்சியில் என்ன நன்மையான காரியங்கள் இருக்கிறதோ அதைப் பாராட்ட வேண்டும். குறைபாடுகள் இருந்தால் அதை ஆரோக்கியமாக கண்ணியமாக சுட்டிக்காட்டுவதுதான் எதிர்க்கட்சிகளுக்கு அழகு. அதை விட்டுவிட்டு தரம் தாழ்ந்த விமர்சனங்களை செய்வதன் மூலமாக எதையும் சாதிக்க முடியாது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.