ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது கிடைக்கும்; அமைச்சர் அருண்ராஜ் பதில்
கோவை: அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை எப்போது கிடைக்கும் என்று அமைச்சர் அருண்ராஜ் பதில் அளித்துள்ளார். அரசின் நிதி நிலைமை தற்போது சரியில்லை என்றும் அவர் கூறி உள்ளார்.
கோவை அருகே அன்னூரில் பல்வேறு கட்சிகளில் இருந்து ஏராளமானோர் தவெகவில் இணைந்தனர். இந் நிகழ்ச்சியில் அமைச்சர் அருண்ராஜ் கலந்து கொண்ட பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம் அன்னூர் மருத்துவமனையின் தரம், பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நிருபர்கள் முன் வைத்தனர்.
தொடர்ந்து, மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 எப்போது வழங்கப்படும்? கடந்த திமுக ஆட்சியில் வழங்கி வந்தவர்களுக்கு கடந்த மாதம் உரிமைத்தொகை வழங்கப்பட்டது, இது வரை கிடைக்காதவர்களுக்கு எப்போது கிடைக்கும் என பல கேள்விகளை எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் அருண்ராஜ், “ கண்டிப்பாக, படிப்படியாக ஒவ்வொரு வாக்குறுதியையும் செய்து கொண்டு தான் இருக்கிறோம். முதல்வர் ஏற்கனவே சொல்லியது போல் கொஞ்சம் அவகாசம் தேவைப்படுகிறது. மாநிலத்தின் நிதி நிலைமை அந்த மாதிரி இருக்கிறது” என்று கூறி சென்றார்.