ரஜினி
சென்னை: நடிகை கயாடு லோஹர் இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவருகிறார். இங்கு மட்டுமின்றி மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்கிறார். இன்று அவர் நடிப்பில் ஐ அம் கேம் ரிலீஸாகியிருக்கிறது. நாளை இம்மார்ட்டல் படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ரஜினிகாந்த்துடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட அனுபவம் குறித்து பகிர்ந்திருக்கிறார் கயாடு லோஹர்.
கயாடு லோஹர்தான் இப்போதைக்கு தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன. தமிழில் அவர் அறிமுகமான முதல் படம் டிராகன் மெகா ஹிட்டடித்தது. அவரது அழகும், நடிப்பும் அனைவரையும் ஈர்த்துவிட்டது. இதன் காரணமாக அவருக்கான கிரேஸ் இங்கே கூடியது. அதனை சரியாக பிடித்துக்கொண்ட அவர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகிவருகிறார். கடைசியாக அதர்வா முரளிக்கு ஜோடியாக இதயம் முரளி கேரக்டரில் நடித்திருந்தார்.
நல்ல பெயர்: படம் ரொம்பவே சுமார்தான். ஆனால் கயாடு ஏற்றிருந்த அமுதா கேரக்டர் அனைவரையும் ஈர்த்துவிட்டது. அதர்வா மீது இருக்கும் காதலை சொல்ல முடியாமல் அவர் திணறும் சீன்களிலும், இன்னொருவரை திருமணம் செய்துகொண்ட பிறகு; அதர்வாவிடம் தன்னுடைய பழைய காதலை சொல்லிவிட்டு கண்ணீர் விடும் இடத்திலும் அவரது நடிப்பு நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருந்தது. இதயம் முரளிக்கு பிறகு அவர் நடித்த ஐ அம் கேம் மலையாளத்தில் இன்று ரிலீஸாகியிருக்கிறது.
நாளை இம்மார்ட்டல்: அதேபோல் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருக்கும் இம்மார்ட்டல் திரைப்படம் நாளை தமிழில் ரிலீஸாகிறது. சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த்துடன் விமானத்தில் இருந்தபடி கயாடு எடுத்துக்கொண்ட செல்ஃபி இணையத்தை ஆக்கிரமித்திருந்தது. உடனே, தர்மன் படத்தில் கயாடு லோஹர் ஒரு பாடலுக்கு நடனமாடவிருக்கிறார். ரஜினிக்காகவும், அஷ்வத் மாரிமுத்துக்காகவும் இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாக சொன்னார்கள்.
கயாடு பேட்டி: ஆனால் அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. இந்நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது, ரஜினியுடன் செல்ஃபி எடுத்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். அந்தப் பேட்டியில் அவர், "நான் அன்று விமானத்தில் வேறு இருக்கையில் அமர்ந்திருந்தேன். இரண்டு ஆண்களுடன் அமர்ந்திருந்தது எனக்கு சௌகரியமாக இல்லை. அதனால் எனது சீட்டை மாற்றினேன். அப்போதுதான் ரஜினி சாரை பார்த்தேன்.
அஷ்வத்திடம் சொன்னேன்: விமானம் தரையிறங்கியதும் அஷ்வத்துக்கு ஃபோன் செய்தேன். அப்போது அவர் தர்மன் ஷூட்டிங்கில் இருந்தார். அவரிடம் நான், 'ரஜினி சாரிடம் என்னை அறிமுகப்படுத்தி வையுங்கள்' என சொன்னேன். அதற்கு அவரோ, 'நீங்களே போய் பேசுங்கள். ஒருவேளை அவருக்கே உங்களை தெரிந்திருக்கலாம்' என கூறினார்.
அதனை கேட்டு ரஜினியின் இருக்கையிடம் சென்று, 'நான் டிராகன் படத்தின் ஹீரோயின்' என அறிமுகப்படுத்திக்கொண்டேன். அதற்கு அவர், 'நீங்கள் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கிறீர்கள் என சொன்னார். அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். பிறகு அவரே என்னிடம், 'ஃபோட்டோ சரியாக வந்திருக்கிறதா என செக் செய்துகொள்ள சொன்னார்" என்றார்.