ராஜினாமா செய்தவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட தடை கோரி வழக்கு
சென்னை: எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தவர்கள், இடைத்தேர்தலில் போட்டியிட தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் எஸ்.காசி ராமலிங்கம் என்பவர் தாக்கல் செய்த மனு: தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற, மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, பெருந்துறை ஜெயகுமார், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை சி.விஜயபாஸ்கர் ஆகியோர், தனிப்பட்ட ஆதாயத்திற்காகவும், பதவிக்காகவும் வாக்காளர்களின் முடிவுக்கு முரணாக, தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இவர்களால், அரசுகளுக்கும், தேர்தல் கமிஷனுக்கும் தேவையற்ற பளு ஏற்பட்டுள்ளதுடன், பண விரயம் ஏற்பட்டுள்ளது. இவர்களை, இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது. இடைத்தேர்தலுக்கான செலவுகளை, அவர்களிடம் வசூலிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.