புதிய தலைமை செயலகம் கட்டினால் அரசு மருத்துவமனையாகி விடும்: அ.தி.மு.க., மாஜி கணிப்பு
சென்னை: ''பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகத்தை கட்டினால், அது தென் சென்னைக்கான மருத்துவமனையாகி விடும்,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
அவரது பேட்டி:
புதிய தலைமை செயலகம் அமைய உள்ள சென்னை பட்டினப்பாக்கம் லுாப் சாலையில், பூர்வக்குடி மக்களின் ஒன்பது கிராமங்களும், 3,000 மீன்பிடி கலங்களும் உள்ளன.
மறுபுறம், சாந்தோம் சாலையில் உள்ள பள்ளிகளில், ஆயிரக்கணக்கான குழந்தைகள் படிக்கின்றனர். அந்த பகுதியில் காலையிலும், மாலையிலும் கடுமையான வாகன நெரிசல் ஏற்படும்.
தமிழகம் முழுதும் பள்ளிகளில் அடிப்படை வசதி இல்லை; குடிக்க தண்ணீர் இல்லை. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பணம் இல்லை என்கின்றனர்.
ஆனால், 1,200 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமை செயலகம் எதற்கு? டில்லியில் பார்லிமென்ட் வளாகம் கூட, 9-00 கோடி ரூபாயில் தான் கட்டப்பட்டது.
தலைமை செயலகம் கட்டுவதற்கு, மக்கள் வசிக்கும் குடியிருப்பு அதிகமுள்ள இடத்தை தேர்வு செய்தது பைத்தியக்காரத்தனம். மக்களின் வரிப்பணம், மக்கள் பயன் பெறும் திட்டங்களுக்கு தான் பயன்பட வேண்டும்.
ஒருவேளை தேவையிருந்தால், சென்னைக்கு வெளியே ஒருங்கிணைந்த வளாகம் கட்டலாம்.
மக்களின் எதிர்ப்பை மீறி, பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால், தென் சென்னைக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாகத்தான் அது உருவாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.