பச்சைமலை பகுதியில் தொடர் மழை: 2 ஆண்டுகளுக்கு பிறகு அடைக்கம்பட்டி ஏரி நிரம்புகிறது
பச்சைமலை பகுதியில் தொடர் மழை: 2 ஆண்டுகளுக்கு பிறகு அடைக்கம்பட்டி ஏரி நிரம்புகிறது
பாடாலூர்: ஆலத்தூர் தாலுகா அடைக்கம்பட்டி கிராமத்தில் உள்ள சிறிய ஏரி, கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நிரம்பும் நிலையில் உள்ளது.பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4 மணியளவில் திடீரென இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
குறிப்பாக அடைக்கம்பட்டி, எலந்தலப்பட்டி, டி.களத்தூர், தேனூர் உள்ளிட்ட கிராமங்களில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. அடைக்கம்பட்டி கிராமத்தின் கிழக்கு எல்லையில் பச்சைமலை அமைந்துள்ளது. இயற்கை வளம், வனப்பகுதி மற்றும் பல்வேறு மூலிகைச் செடிகளை கொண்ட பச்சைமலை பகுதியில் நீர் இடி காரணமாக பெய்த கனமழையால் மழைநீர் ஓடைகள் மற்றும் வாய்க்கால் வழியாக அடைக்கம்பட்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.
இதனால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக போதிய நீர்வரத்து இல்லாமல் இருந்த நிலையில், தற்போது ஏரி நிரம்பும் நிலையை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்தால் ஏரி முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.