நவ. 1
நவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் உள்ள கடைகளில் நவம்பர் 1 ஆம் தேதிக்குள் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது குறித்து...
தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதிக்குள் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் பெயர்ப் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என 2025 ஜூன் மாதத்தில் தமிழக அரசு உத்தரவிட்டது. பெயர்ப் பலகைகளில் தமிழ்ப் பெயருக்குக் கீழே ஆங்கிலத்தில் பெயர் வைத்துக் கொள்ளலாம் என்றும், தவறினால் ரூ. 2,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தியது.
இதனிடையே, அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பையில் உள்ள இந்திய சில்லரை வர்த்தகர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சுரேந்தர் முன்னிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசின் உத்தரவைச் செயல்படுத்தத் தயாராக இருப்பதாகவும், 3 மாத கால அவகாசம் வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, இறுதி வாய்ப்பாக நவம்பர் 1 ஆம் தேதிக்குள் கடைகளில் பெயர்ப் பலகைகளைத் தமிழில் மாற்ற வேண்டும் என்றும், கெடு முடிவதற்குள் பெயர்ப் பலகைகளை மாற்றத் தவறினால், அதிகாரிகள் தரப்பில் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
The Madras High Court has ordered that shops in Tamil Nadu must display nameboards in Tamil by November 1
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.