📅 Thursday, 03 September 2026 IST | ஆவணி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 03, 2026 06:03 PM

நேப்பாளப் பேரிடர்: மீட்புப் பணிகளில் உதவக் குழுவை அனுப்பியது சிங்கப்பூர்

நேப்பாளப் பேரிடர்: மீட்புப் பணிகளில் உதவக் குழுவை அனுப்பியது சிங்கப்பூர்

வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள நேப்பாளத்திற்கு உதவக் குழுவொன்றைச் சிங்கப்பூர் அனுப்பியுள்ளது. சிங்கப்பூர்க் காவல்துறை, சுகாதார அறிவியல் ஆணையம் ஆகியவற்றின் அதிகாரிகள் அதில் இடம்பெற்றுள்ளனர்.

நேப்பாளத்தின் கோரிக்கைக்குச் செவிசாய்த்து அங்குக் குழுவை அனுப்பியுள்ளது சிங்கப்பூர்.

குழுவில் காவல்துறை அதிகாரிகள் 17 பேரும் சுகாதார அறிவியல் ஆணையத்தின் தடயவியல் மருத்துவப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் இருவரும் இருப்பதாகக் காவல்துறை புதன்கிழமை (செப்டம்பர் 2) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

நிவாரணப் பணிகளை மேலும் வலுப்படுத்த அடுத்த சில நாள்களில் 14 அதிகாரிகளைக் கொண்ட மற்றொரு குழுவை அனுப்பத் திட்டமிட்டுள்ளதாகவும் அறிக்கை குறிப்பிட்டது.

செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 1) நேப்பாளத்திற்குச் சென்ற சிங்கப்பூர்க் குழுவினரைச் சாங்கி விமானநிலையத்தில் சந்தித்தார் இரண்டாம் வெளியுறவு அமைச்சர் சிம் ஆன்.

காவல்துறையின் உதவி ஆணையர் பேட்ரிக் டான், 33 பேர் அடங்கிய குழுவை வழிநடத்துவார்.

பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளங் காணுதல், வான்வழிக் கண்காணிப்பு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகள் குழுவில் இருக்கின்றனர். அவர்கள் இந்தத் துறைகளில் நேப்பாள அதிகாரிகளுக்கு ஆதரவு வழங்குவார்கள் என்று காவல்துறை தெரிவித்தது.

நேப்பாள வெள்ளத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஒன்பது பேர் காணாமற்போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.