மேற்காசிய பயணத்தை தவிருங்கள்; அமெரிக்கா அவசர எச்சரிக்கை
வாஷிங்டன்: மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் பதற்றம் காரணமாக அமெரிக்கா அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக மேற்கு ஆசிய நாடுகளுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை முடக்கும் வகையில் அந்நாட்டின் மீது அமெரிக்கா கடந்த பிப்ரவரி மற்றும் மார்சில் தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு மேற்காசியாவில் உள்ள அமெரிக்க தளங்களை தாக்கிய ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியது. தற்போது மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் எச்சரிக்கை விடுத்து அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
* தற்போது மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். விமான சேவைகள் ரத்து, வான்வெளி மூடல்கள் மற்றும் பயண இடையூறுகள் குறித்து அறிந்திருக்க வேண்டும்.
* ஈரான் ஆதரவு ஹவுதிகள் பொதுமக்கள், விமான நிலையங்கள் உட்பட சவூதி அரேபியாவுக்கு எதிராகப் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த ராணுவ மோதல் விரைவாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
* மத்திய கிழக்குக்கு வெளியே உள்ள அமெரிக்கர்கள், அப்பகுதிக்குச் செல்வது மற்றும் அப்பகுதி வழியாகப் பயணம் செய்வது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். அப்பகுதிக்குச் செல்பவர்கள் அல்லது அங்கிருந்து வருபவர்கள், விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் குறித்த தகவல்களைக் கண்காணிக்க வேண்டும்.
* மத்திய கிழக்குக்கு வெளியே அமெரிக்கத் தூதரகங்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
* ஈரான் மற்றும் ஈரானை ஆதரிக்கும் குழுக்கள், வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க வணிகங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் உட்பட, உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கர்களுடன் தொடர்புடைய இடங்களையோ குறிவைக்கக்கூடும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.