இந்தியாவிடம் வாங்கிய அடி.. "அயர்லாந்து கூட விளையாடினா முன்னேற முடியாது" என ஆப்கன் கேப்டன் புலம்பல்
இந்தியாவிடம் வாங்கிய அடி.. "அயர்லாந்து கூட விளையாடினா முன்னேற முடியாது" என ஆப்கன் கேப்டன் புலம்பல்
டெல்லி: அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் இந்திய அணியிடம் 127 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் படுதோல்வி அடைந்து, தொடரை 3-0 என்ற கணக்கில் கோட்டைவிட்டது. இந்த மோசமான தோல்விக்குப் பிறகு பேசிய ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் இப்ராஹிம் சத்ரான், அயர்லாந்து போன்ற அணிகளுடன் ஆடுவதால் எந்த பயனும் இல்லை என்று வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, அபிஷேக் சர்மாவின் அதிரடி சதம் மற்றும் சஞ்சு சாம்சனின் 50 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்களில் 221 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 222 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 14.1 ஓவர்களிலேயே வெறும் 94 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி படுதோல்வி அடைந்தது. இந்திய தரப்பில் நிதிஷ் ரெட்டி மற்றும் ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
போட்டி முடிந்த பின் பேசிய ஆப்கானிஸ்தான் கேப்டன் இப்ராஹிம் சத்ரான், "நிச்சயமாக இந்த படுதோல்வி பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. பவர்பிளேயில் ஓரளவு சிறப்பாக ஆடியது மற்றும் வீரர்களின் ஆக்ரோஷமான அணுகுமுறை மட்டுமே எங்களுக்குச் சற்று மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், இந்த போட்டியிலும் நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளைத் தாரைவார்த்து தவறு செய்துவிட்டோம். இந்த தவறுகளிலிருந்து நாங்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "உலகக் கோப்பைக்குப் பிறகு நாங்கள் விளையாடும் முதல் டி20 தொடர் இதுவாகும். நாங்கள் அயர்லாந்து, ஜிம்பாப்வே போன்ற அணிகளுக்கு எதிராக மட்டுமே விளையாடினால் எங்கள் கிரிக்கெட் தரத்தை உயர்த்த முடியாது. இந்தியா போன்ற உலகின் தலைசிறந்த பெரிய அணிகளுக்கு எதிராகத் தொடர்ந்து விளையாடினால் மட்டுமே எங்களால் முன்னேற முடியும். ஒன்று அல்லது இரண்டு தொடர்களில் நாங்கள் திணறினாலும், காலப்போக்கில் நிச்சயம் மீண்டு வருவோம். அதிரடி எண்ணம் இல்லாவிட்டால் சர்வதேச அரங்கில் பெரிய அணிகளை வீழ்த்துவது கடினம்" என்று தெரிவித்தார்.
பவர்பிளேயில் 3 ஓவர்களில் வெறும் 9 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேலைப் பாராட்டிய சத்ரான், "அக்சர் படேல் கடந்த காலத்திலும் இதைச் செய்துள்ளார், தற்போதும் செய்கிறார். ஆட்டத்தின் இக்கட்டான சூழ்நிலைகளை எப்படிச் சமாளித்து விக்கெட் எடுக்க வேண்டும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். தனது பந்துவீச்சு குறித்து அவர் எப்போதும் சிந்தித்துச் சிறப்பாகச் செயல்படுகிறார்" என்று கூறினார்.