📅 Wednesday, 09 September 2026 IST | ஆவணி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 09, 2026 02:04 PM

சிக்மா விழா.. விஜய் பெயரை சொன்ன ஹீரோ.. எழுந்த கரகோஷம்.. ஜேசன் சஞ்சய் ரியாக்‌ஷன் செம

சிக்மா விழா.. விஜய் பெயரை சொன்ன ஹீரோ.. எழுந்த கரகோஷம்.. ஜேசன் சஞ்சய் ரியாக்‌ஷன் செம

சென்னை: விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் சிக்மா திரைப்படம் அக்டோபர் மாதம் ரிலீஸாகவிருக்கிறது. இதில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். தாம்ன் இசையமைப்பில் லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது நடந்த விஷயம் ஒன்று வைரலாகியிருக்கிறது.

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் வெளிநாட்டில் சினிமா தொடர்பான படிப்பை படித்துவிட்டு; லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சிக்மா படத்தை இயக்க கமிட்டானார். முதலில் இந்தப் படத்தில் யாருமே நடிக்க முன்வரவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் கதையை ஜேசன் சொன்னவுடனேயே சந்தீப் கிஷன் இதில் ஹீரோவாக கமிட்டாகிவிட்டார். இதில் அவருடன் ராஜூ சுந்தரம் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். தமன் இசையமைத்திருக்கிறார்.

கவனம் ஈர்த்த ட்ரெய்லர்: விஜய் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கிறார். எனவே அவரது இடத்தை அவரது மகன் ஜேசன் சஞ்சய் பிடிப்பாரா என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்தது. அது கிட்டத்தட்ட சாத்தியம்தான் என்பதை படத்தின் ட்ரெய்லர் உறுதி செய்திருக்கிறது. அவரது மேக்கிங் உண்மையில் சூப்பராகவே இருந்தது. மேலும் படத்தின் முதல் சிங்கிளில் ஜேசன் நடனம் ஆடியதும் செம ட்ரெண்டானது. அப்படியே வின்டேஜ் விஜய்யை பார்ப்பது மாதிரியே இருந்தது என்று கொண்டாடினார்கள் ரசிகர்கள்.

அக்டோபரில் ரிலீஸ்: முதலில் இப்படம் ஜூலை மாதம் ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் அந்த மாதம் விஜய்யின் ஜனநாயகன் வந்தது. எனவே தேவையில்லாத ரிஸ்க்கை எடுக்க வேண்டாம் என்று முடிவெடுத்து படத்தின் ரிலீஸை அக்டோபருக்கு தள்ளி வைத்தார்கள். அதன்படி படமானது அக்டோபர் இரண்டாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதன் காரணமாக ப்ரோமோஷன் பணிகள் எல்லாம் சூடுபிடிக்க தொடங்கியிருக்கின்றன. ஜேசனும் எந்த சலிப்பும் இல்லாமல் தொடர்ந்து பேட்டிகளையும் கொடுத்துவருகிறார்.

விஜய் சப்போர்ட்: இந்தப் படத்தின் அறிவிப்பு வந்ததிலிருந்து ஷூட்டிங் முடிந்தவரை விஜய்யிடமிருந்து ஜேசனுக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை என்று சிலர் கூறினார்கள். ஜேசனும் அமைதியாகவே இருந்தார். ஆனால் தன்னுடைய பேட்டிகளில் அத்தனையையும் உடைத்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். சினிமாவுக்குள் வருவதாக சொன்னபோது விஜய் தனக்கு செய்த அட்வைஸ், அவர் முதலமைச்சராகிவிட்டதால் தங்களுக்கு பொறுப்பு அதிகமாகியிருக்கிறது என்று பல விஷயங்களை பேசினார்.

இதன் மூலம் அவர்களுக்குள் பெரிய அளவில் பிரச்னை இல்லை என்பது உறுதியானது. இதன் காரணமாக விஜய்யின் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். நிச்சயம் ஜேசனின் முதல் படத்தை பெரிய வெற்றி படமாக மாற்றிட வேண்டும் என்று உறுதியோடு இருக்கிறார்கள். இந்நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று சென்னையில் நடைபெற்றது.

ஜேசன் சஞ்சய் ரியாக்‌ஷன்: அதில் பேசிய சந்தீப், "எங்களுக்கு, இந்தப் படத்தின் அடையாளமாக இருப்பது நம்முடைய முதலமைச்சர் விஜய்தான். அவரது ரசிகர்களுக்கு மிக மிக நன்றி" என்றார். அப்போது ரசிகர்கள் பலத்த ஆரவாரத்தை எழுப்பினார்கள். சில நொடிகள் சந்தீப்பால் பேசவும் முடியவில்லை. அதை பார்த்த ஜேசன் சஞ்சய் சிரித்துவிட்டார். அந்த வீடியோ சோஷியல் மிடீயாவில் வைரலாகியிருக்கிறது.