📅 Sunday, 21 June 2026 IST | ஆனி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News June 21, 2026 08:32 AM

அதிகாரிகள் அலட்சியத்தால் மழையில் நனைந்து 50,000 மூட்டை நெல் வீண்; விவசாயிகள் வேதனை

அதிகாரிகள் அலட்சியத்தால் மழையில் நனைந்து 50,000 மூட்டை நெல் வீண்; விவசாயிகள் வேதனை

தஞ்சாவூர்: கும்பகோணத்தில், அதிகாரிகளின் அலட்சியத்தால் மழையில் நனைந்து, 50,000க்கும் மேற்பட்ட மூட்டை நெல் வீணாகியுள்ளது. இதற்கு காரணமான அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

விவசாயிகளிடம் இருந்து, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நெல், அரவை ஆலைகளில் அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படுகிறது.

மூடப்படவில்லை

தஞ்சாவூர் மாவட்டத்தில், கடந்த சம்பா பருவத்தில், 6 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதை விட அதிகமாக, 6.22 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டு, 23 கிடங்குகள் மற்றும் திறந்தவெளி நிலையங்களில் நெல் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டன.

தற்போது, மாவட்டத்தில், 3.50 லட்சம் டன் நெல் இருப்பு உள்ளது. இந்நிலையில், கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில், தனியாருக்கு சொந்தமான 15 ஏக்கரில், நுகர்பொருள் வாணிப கழகத்தால், 3 கோடி கிலோ நெல் சேமிப்பு திறன் உடைய திறந்தவெளி நிலையம், கடந்த பிப்., 2ம் தேதி திறக்கப்பட்டது.

இதனால், வெயிலில் நெல் மூட்டைகள் கிழிந்து, நெல் கருகி வீணாகியது. தற்போது, பெய்த மழையில் ஆயிரக்கணக்கான கிலோ நெல் வீணாகியுள்ளது. இதற்கு, வாணிப கழக அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்றும், அவர்களே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, தமிழக காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலர் சுவாமிமலை விமல்நாதன் கூறியதாவது: நெல் மூட்டைகள் பாதுகாப்பில் ஒவ்வொரு அரசும், அதிகாரிகளும் தவறி வருவது வேதனையானது. ஆரம்ப காலத்தில் இருந்தே பட்டீஸ்வரம் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில், நெல் மூட்டையை தார்ப்பாய் தட் டுபாடு காரணமாக மூடாமல் விட்டுள்ளனர். அதன் விளைவாக, பெரும்பாலான நெல் மூட்டைகள் கருப்பாகி முளைத்து விட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகாரிகள் பதில் என்ன? நுகர்பொருள் வாணிபகழக அதிகாரிகள் கூறுகையில், 'பாதிக்கப்பட்ட மூட்டைகளை உடனடியாக பிரித்து, சீரமைத்து வருகிறோம். 630 மூட்டைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தார்ப்பாய்கள் இருப்பில் உள்ளன. மழைநீர் தேங்காத வகையில் பணிகள் நடந்து வருகிறது' என்றனர்.

வேளாண் துறை அமைச்சர் வினோத், தன் சொந்த தொகுதியில் வீணான நெல் மூட்டையை சென்று பார்க்காமல், முதல்வர் பிறந்த நாள், பஸ் இயக்கம் போன்ற விழாக்களில் பங்கேற்றதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.