13 ஆண்டுகளுக்குப் பின் வரலாற்று வெற்றி.. துலீப் டிராபியை வென்றது கிழக்கு மண்டலம்.. இஷான் கிஷன் சாதனை
13 ஆண்டுகளுக்குப் பின் வரலாற்று வெற்றி.. துலீப் டிராபியை வென்றது கிழக்கு மண்டலம்.. இஷான் கிஷன் சாதனை
சென்னை: 2026 துலீப் டிராபி கிரிக்கெட் இறுதிப் போட்டியில், தென் மண்டல அணியை வீழ்த்தி 13 ஆண்டுகளுக்குப் பிறகு கிழக்கு மண்டல அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. 5 நாட்கள் நடைபெற்ற இந்த இறுதி ஆட்டம் டிராவில் முடிந்த போதிலும், முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் கிழக்கு மண்டல அணி தனது 3-வது துலீப் டிராபி கோப்பையைக் கைப்பற்றியது.
முதல் இன்னிங்சில் கிழக்கு மண்டல அணி 708 ரன்கள் குவித்த நிலையில், தென் மண்டல அணி தனது முதல் இன்னிங்சில் 336 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தென் மண்டல கேப்டன் திலக் வர்மா அபாரமாகப் போராடி 99 ரன்களில் ஆட்டமிழந்தார். தேவ்தத் படிக்கல் 62 ரன்கள் எடுத்தார். கிழக்கு மண்டல பந்துவீச்சாளர்களான முகேஷ் குமார் மற்றும் முகமது ஷமி இருவரும் இணைந்து 5 விக்கெட்டுகளைச் சாய்த்தனர்.
372 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை ஆடிய கிழக்கு மண்டல அணி, 5-வது நாளான இன்று 7 விக்கெட் இழப்பிற்கு 388 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இதில் முகமது கௌனைன் குரேஷி 116 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் இஷான் கிஷன் 80 ரன்களும், ஷிகர் மோகன் மற்றும் அனுகுல் ராய் ஆகியோர் அரைசதமும் அடித்தனர். இதனை அடுத்து போட்டி டிராவில் முடித்துக்கொள்ளப்பட்டது.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் 270 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 80 ரன்களும் விளாசிய இஷான் கிஷன், மொத்தம் 350 ரன்கள் குவித்து துலீப் டிராபி வரலாற்றில் ஒரே போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற ராமன் லம்பாவின் (340 ரன்கள்) பழைய சாதனையை முறியடித்தார். அபாரமாக ஆடிய இஷான் கிஷனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருதை தென் மண்டல கேப்டன் திலக் வர்மா தட்டிச் சென்றார்.
சையத் முஷ்டாக் அலி மற்றும் துலீப் டிராபி ஆகிய இரண்டு முக்கிய உள்நாட்டுத் தொடர்களிலும் கேப்டனாக கோப்பையை வென்றதோடு, இரண்டின் இறுதிப் போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருதையும் பெற்று இஷான் கிஷன் புதிய சாதனை படைத்துள்ளார்.